2015 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2015 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 11,000 times in 2015. If it were a concert at Sydney Opera House, it would take about 4 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

Posted in வகைப்படுத்தப்படாதது | 6 பின்னூட்டங்கள்

குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி???

floodone

சென்னையில் பெய்த கடும் மழையால் அவ்வூர் மக்கள் அனுபவித்த  அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல..  ஊரெங்கும் வெள்ளம்.. திரும்பிய திசை எல்லாம் தண்ணீர்.. ஆனால் தாகம் தீர்க்க  ஒரு வாய் தண்ணீர் இல்லாத அவலம்! யாரேனும் தங்கள் தாகத்தை தீர்க்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து நிற்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை! சென்னை என்று இல்லை எந்த ஊரில் இப்படி பேய் மழை பெய்தாலும் , அவர்களுக்கும் இதே நிலைமை தான்! இது போன்ற பேரழிவு நேரங்களில், தேங்கி கிடக்கும் மழை நீரை  குடிப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றுவது எப்படி என்று  ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்!

தேங்கி கிடக்கும் மழை நீர் குட்டைகளில் நீர் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை! சாதாரண நாட்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரே அசுத்தங்கள் நிறைந்ததாக தான் இருக்கும். இது போன்ற பேரழிவு காலங்களில் , சொல்லவே வேண்டாம் ,தேங்கி கிடக்கும் மழை நீரில் , சாக்கடைகள் உடைந்து, கழிவு  நீரும் அவற்றோடு கலந்து விடும் வாய்ப்பு ரொம்பவே அதிகம்! இவ்வளவு அசுத்தத்தங்கள் நிறைந்த நீரை குடிப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றுவது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை தான்! இருந்தாலும் அவசர காலங்களில், இந்த உத்திகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்பது என் கருத்து!

இவ்வாறு தேங்கி கிடக்கும் மழை நீரில் பாக்டீரியா(Bacteria) போன்ற எண்ணற்ற நுண்கிருமிகள் வசிக்கும். இதில் எந்த கிருமி , நம் உடம்பினுள் நுழைந்தாலும் சிக்கல் நமக்கு தான். இனி படிப்படியாக எப்படி தேங்கி கிடக்கும் நீரை குடி நீராக மாற்றுவது என்று பார்க்கலாம்!

1)வடிகட்டுதல்
தேங்கிய மழை நீரை , ஒரு சுத்தமான துணி கொண்டு முதலில் வடிகட்ட வேண்டும்! அவ்வாறு வடிகட்டும் போது , அந்நீரில் கிடக்கும் பெரிய துகள்கள் வடிகட்டப்பட்டு விடும்.

floodtwo

2)தெளிந்த நீர் ஆக்குதல்
நீரை தெளிவானதாக ஆக்கும் அலுமினியம் சல்பேட்டை , நீரில் சேர்க்க வேண்டும்! வடிகட்டியில் நில்லாமல் ஓடிய , மிகச் சிறிய அளவிலான அசுத்தங்கள் எல்லாம் , இந்த அலுமினியம் சல்பேட் சேர்க்கையால் , ஒன்றோடு ஒன்று கூடி , அளவில் பெரியதாகி விடும்! சிறிய அளவிலான அசுத்தங்களை நீக்குவதை விட , பெரிய அளவிலான அசுத்தங்களை சுலபமாக நீக்கி விடலாம்!தண்ணீரில் இந்த அலுமினியம் சல்பேட்டை போட்டு , குறைந்தது 30 நிமிடமாவது , அந்த தண்ணீரை ஆடாது , அசையாது விட்டு விடுவது நல்லது! அளவில் பெரியதாகி விட்ட அசுத்தங்கள், பாத்திரத்தின் அடியில் சென்று தங்கி விடும். பின் தெளிந்த நீரை , வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி விடலாம்! இந்த அலுமினியம் சல்பேட்டை  படிகாரம்(Alum ) என்று குறிப்பிடுவர்!

floodthree

Alum

இது நமக்கு எந்த கெடுதலும் செய்யாது! அச்சம் ஏதும் இல்லாமல் இதை உபயோகம் செய்யலாம்! இந்த படிகாரம், கலங்கிய நீரை, தெளிவான நீராக ஆக்க வல்லது!இந்த படிகாரம் எவ்வளவு உபயோகிக்க வேண்டும் என்று ஒரு கேள்வி இப்போ உங்க மனசுல தோணி இருக்கும் இல்லையா! மூடை மூடையா எல்லாம் தேவை படாதுங்க.. ஒரு 50 கிராம் படிகாரத்தை , ஒரு 10 லிட்டர் வாளி தண்ணீரில் கலந்து அதை கொண்டு ஒரு 20 அடி ஆழ கிணற்று தண்ணீரை சுத்த படுத்தி விடலாம் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!!

floodfour

3)மீண்டும் கார்பன் வடிகட்டி மூலம் வடிகட்டுதல்(Activated Carbon Filter)
இந்த நிலையில் தண்ணீர் பார்க்க ஓரளவு தெளிவாக இருந்தாலும் , நம் கண்ணுக்கே தெரியாமல் , ஆபத்தை விளைவிக்கும் துகள்கள் நிறைந்ததாக தான் இருக்கும்! அந்த தண்ணீரை , கார்பன் வடிகட்டி மூலமாக ஒரு தடவை வடிகட்டும் போது , அதில் இருக்கும் நச்சு பொருள்கள் கண்டிப்பாக வடிகட்டப்பட்டு விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! இந்த கார்பன் வடிக்கட்டி, தீங்கு செய்யக்கூடிய வேதிப்பொருட்களான குளோரின்(Chlorine) மற்றும் அத்தண்ணீரில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகளையும் நீக்க வல்லது!

FLOODFIVE       flood6 images

தண்ணீரில் இருந்து கிளம்பும் கெட்ட நாற்றத்தையும் நீக்கி விடும்! இதனால் , தண்ணீரின் சுவை மேம்படுத்தப்பட்டு விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இத்தோடு முடிந்ததா என்று நீங்கள் அவசரப்படுவது புரிகிறது! கண்டிப்பாக இன்னும் முடியவில்லை.. மேலே படியுங்கள்! இது போன்ற வடிகட்டி எங்கே கிடைக்கிறது என்று யோசிப்போர் இங்கே கிளிக் செய்யவும்.

images            images (1)

 

4)விஷக்கிருமிகளை நீக்குதல்

இந்த நிலையில் , விஷக்கிருமிகள் நீக்குவதற்காக , பொட்டாசியம் பர்மாங்கனேட்(Potassium Permanganate) உபயோகப் படுத்தப்படும்!

POTASSIUM_PERMANGANATE

Potassium Permanganate crystals

இதை தண்ணீரில் சேர்க்கும் போது , அதில் இருக்கும் நுண்கிருமிகள் மொத்தமும் அடிப்பட்டு போய் விடும்! சரி, இந்த பொட்டசியம் பெர்மாங்கனேடை எவ்வளவு உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். இவ்வளவு கிராம் , அவ்வளவு கிராம் என்று எந்த கணக்கும் போட்டு மண்டையை பிய்த்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை! ரொம்ப சுலபங்க.. நீங்கள் சுத்தப்படுத்த போகும் நீரில் , கொஞ்சம் கொஞ்சமாக , இந்த  பொட்டசியம் பெர்மாங்கனேடை போட்டு கொண்டே வாருங்கள்.. ஒரு தருணத்தில் , திடீரென்று தண்ணீர் பிங்க் நிறமாக மாற ஆரம்பிக்கும்! அத்தருணத்தில் , நீங்கள் அறிந்து கொள்ளலாம் , தண்ணீர் நுண்கிருமிகள் ஏதும் இன்றி சுத்தப்படுத்தப் பட்டு விட்டது என்று!

potassium_permanganate_solution_image_for_website

எவ்வளவு நேரம் வரை இந்த பிங்க் நிறம் நீடித்து நிற்குதோ , அந்த நொடி வரை தண்ணீர் சுத்தமாக நுண்கிருமிகள் ஏதும் இல்லாமல் இருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்!

5)மீண்டும் வடிக்கட்டுதல்
இனி மறுபடியும் தண்ணீரை வடிக்கட்ட வேண்டும். ஏனெனில் மேலே சொல்லப்பட்ட விஷக்கிருமிகளை நீக்குதல் செயல்முறையில், விஷக்கிருமிகளை செயலிழக்க செய்ததோடு நில்லாமல் சில தேவை இல்லாத துணைப்பொருட்களையும் , அத்தண்ணீரில் உண்டாக்கி விட்டு விடும். அது மிகவும் ஆபத்தானவை. இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். கார்பன் வடிகட்டி கொண்டு முதலில் வடிக்கட்டுவது குளோரினை நீக்குவதற்காக. இந்த குளோரினால் , துணைப்பொருள் எதுவும் உண்டாகி விடக்கூடாது என்பதற்காக. இரண்டாம் முறை வடிக்கட்டுவது , ஏதேனும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய துணைப்பொருள் எதுவும் உண்டாகி இருப்பின் அவற்றை நீக்குவதற்க்காக.

6)கொதிக்க வைத்தல்
கடைசியாக தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நிலையில் , தண்ணீரை கொதிக்க வைக்கும் போது , அந்நீரில் ஏதேனும் , ரசாயனங்கள் கலந்திருந்தால் அவை ஆவியாகி வெளியே சென்று விடும்.

Image3BBoil

இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரை , நீண்ட நாள் சேமித்து வைக்க போகிறீர்கள் என்றால் , அதில் கொஞ்சம் சோடியம் ஹைப்போகிலோரைட் (Sodium Hypochlorite) போட்டு வைப்பது நலம். இதை ப்ளீச்(Bleech) என்று சொல்ல கேட்டிருப்பீர்கள். இது ஒரு கிருமி நாசினி . சேமித்து வைத்த தண்ணீர், நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் பார்த்து கொள்ளும்.

16-drops-bleach-one-eighth-teaspoon-per-gallon-of-water

16 Drops of Bleach for 4 litres of water to be stored

குட்டைகளில்  தேங்கிய மழை நீரை எப்படி குடிநீராக்குவது என்று பார்த்தோம். வெள்ளம் போன்ற அவசர காலங்களில், இனி குடிக்க நீர் இல்லாமல் அடுத்தவரை எதிர்பார்க்கும் அவலம் வேண்டாம். நமக்கு நாமே உதவி செய்து கொள்வதோடு அடுத்தவருக்கும் உதவுவதே  புத்திசாலிதனம்!

படங்கள் :இணையம்
தகவல் :இணையம்

நன்றி !

 

 

Posted in அறிவியல், வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி

dengue

டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவக் கூடியது!இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல்! இக் காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை போது வரும் தடிப்புகள் போல தடிப்புகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் , மிக கொடூரமான , இரத்தபெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலாக மாறி ,உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்! முறையாக நோயாளிகளை , கவனிக்காத பட்சத்தில், இரத்தபெருக்கு உண்டாகும்! இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை , மிக குறைந்து போகும்!

dengue2

டெங்கு காய்ச்சலுக்கு இன்று வரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை! அதனால் , இக்காய்ச்சல் வந்தால் , மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்! இது ஏடிஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வகை கொசுவால் பரவக்கூடியது! டெங்கு வராமல் தங்களை காத்து கொள்ள நினைப்பவர்கள் , கொசு தன்னை கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது ரொம்பவே அவசியம்!

dengue8

பொதுவாக , டெங்கு காய்ச்சலால் அவதி படுபவருக்கு , மருந்து என்று எதுவும் கிடையாது! மிதமான டெங்கு காய்ச்சலால் அவதிபடுபவருக்கு , வாய் வழியாக அல்லது நரம்பு வழியாக நீர்சத்து உடம்பின் உள்ளே ஏற்றப்படும்! அவ்வாறு நீர்ச்சத்து ஏற்றப்படுவதனால்  , உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்! மிக கடுமையான டெங்குவால் பாதிக்க பட்டவர்களுக்கு , உடம்பில் நரம்பு வழியாக , நீர்ச்சத்து ஏற்றப்படுவதோடு , இரத்தமும் ஏற்றப்படும்!!

டெங்கு காய்ச்சலை மூன்று கட்டமாக பிரித்து கொள்ளலாம்..
1) Febrile phase காய்ச்சல் கட்டம்
Febrile கட்டம் என்றால் கடுமையான காய்ச்சல் வரக்கூடிய முதல் கட்டம். கடுமையான காய்ச்சல் என்றால் 104, 105, 106 என்று கொளுத்தி தள்ள கூடிய காய்ச்சல் .கூடவே , உடம்பு வலியும் , தலை வலியும் வரும்! சிலருக்கு வாந்தியும் இருக்கும்! இந்த சிரமங்கள் இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை இருக்கும்! வெகு சிலருக்கு , சரும தடிப்புகள் உண்டாகும்! அவை ஒரு ஏழு நாட்கள் வரை இருந்து விட்டு பின்பு மறையும்!சிலருக்கு வாய் மற்றும் மூக்கின் உள்ளே அமைந்திருக்கும் சளிச்சவ்வுகளில் இரத்த பெருக்கு உண்டாகும். இந்த காய்ச்சல் சற்று வித்தியாசமானது தான்! ஒரு நாள் காய்ச்சலே இல்லாதது போல் தோன்றும்! மறுநாள் , வியாதி வந்தவரை போட்டு பாடாய் படுத்தி எடுத்து விடும்!

dengue3

2)Critical Phase (நெருக்கடியான கட்டம்)
சிலரே இந்த நெருக்கடியான கட்டத்துக்கு செல்கின்றனர். இந்த கால கட்டத்தில் , இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் , Plasma என்ற நிறமற்ற திரவம் , இரத்த நாளத்தை விட்டு வெளியேறி செல்கிறது!இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்!மார்பகம் , அடி வயிற்று பகுதிகளில் , இந்த நிறமற்ற திரவம் , குவிந்து கொள்கிறது !இவ்வாறு , இந்த நிறமற்ற திரவம் , இரத்த அணுக்களை ஏந்தி செல்லும் வேலையை செய்யாமல் பந்த் செய்வதால் , முக்கியமான உடல் உறுப்புகளுக்கு , இரத்தம் முழுமையாக விநியோகம் செய்யப்படாமல் , உடம்பு திணறி போகும் !இதனால் , பல உறுப்புகள் செயல் படாமல் போக கூடும் !மேலும் , இரைப்பை குடலில் , அதிகமான இரத்த பெருக்கு உண்டாகக்கூடும்!

3)Recovery Phase(மீட்பு கட்டம் )
இந்த மீட்பு கட்டத்தில் , இரத்த நாளத்தை விட்டு நீங்கி சென்ற , அந்த நிறமற்ற திரவம் , திரும்பவும் தன் இருப்பிடம் வந்து சேரும் ! இது ஒரு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்! உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும் ! அத்தகைய தருணத்தில் , ஒரு சிலருக்கு , உடம்பு முழுவதும் ஒரு அரிப்பு தோன்றும்!

கொசுவால் எப்படி டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று அடுத்து பார்க்கலாம்..
டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசு , ஒரு மனிதனை கடிக்கும் போது , அதன் எச்சில் வழியாக வைரஸ் , மனித உடம்பினுள் நுழைந்து விடும்! அவை , வெள்ளை இரத்த அணுக்களை கெட்டியாக பிடித்து கொள்ளும்! பின்னர் , மெதுவாக , வெள்ளை இரத்த அணுக்களின் உள்நுழைந்து , தன் வம்சத்தை வளர்க்கும் அதாவது தன் எண்ணிக்கையை பெருக்க ஆரம்பிக்கும்! இப்படி அத்துமீறி அந்தப்புரம் நுழைந்து தன் எண்ணிக்கையை கூட்டி கொண்டிருக்கும் வைரஸின் அட்டூழியம் தாங்க மாட்டாமல் , வெள்ளை இரத்த அணுக்கள் , சில Signalling Protiens , அதாவது புறாக்கள் மூலமாக , தூது அனுப்ப, உடம்பு போருக்கு தயாராகிறது! அதன் விளைவாய் , கடுமையான காய்ச்சல் , உடம்பு வலி , வாந்தி , அது , இதுவென்று எல்லா பிரச்சனைகளையும் உண்டு செய்கிறது உடம்பு! கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டோருக்கு, கல்லீரல்(Liver ) , எலும்பு மஜ்ஜை(Bone Marrow) போன்ற முக்கியமான பாகங்கள் அதிகமாக  பாதிப்படையும் !! இரத்த நாளங்களில் ,இரத்த அணுக்களை சுமந்து செல்லும் நிறமற்ற திரவம், தனியாக பிரிந்து சென்று , உடம்பில் ஆங்காங்கே இருக்கும் புழைகளில்(cavities ) சென்று தங்கி விடும்! இதனால்,முக்கியமான உறுப்புகளுக்கு , இரத்தம் சரியாக ஓட முடியாது தடை பட்டு விடும்! இந்த எலும்பு மஜ்ஜை(Bone Marrow ) செயல் பிறழ்ச்சியால் , தட்டணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போகும் ! இந்த தட்டணுக்கள் தான் , இரத்தம் உறைவதற்கு மிகுந்த துணை புரிவது ! இது எண்ணிக்கையில் கணிசமாக குறையும் போது , இரத்தம் உறைய முடியாமல் , இரத்த பெருக்கு அதிகமாகும் ! நெருக்கடியான கட்டத்தில் , இரத்த பெருக்கு அதிகமாக உண்டாவதற்கு , இது தான் முக்கிய காரணம் !!

இனி டெங்குவுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இந்த டெங்கு காய்ச்சல் பற்றி கேள்வி பட்டதுண்டு ஆனால் என் குழந்தைகளுக்கு வந்த போது தான் அதன் கொடூரத்தை முழுதும் அறிந்தேன்! நன்றாக தான் காலையில் ஸ்கூலுக்கு கிளம்பினார்கள்! மதியமே கடும் காய்ச்சலோடு வீடு திரும்பினர்! எதற்கு காய்ச்சல் என்றே புரியவில்லை! அறிகுறி எதுவும் இல்லை! சாப்பாடு ரசிக்க வில்லை! எதை கொடுத்தாலும் அதை சாப்பிட்டு விட்டு வாந்தி செய்தார்கள்! பயத்தில் முதல் நாளே ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டோம்! எந்த அறிகுறியும் இல்லாததால் , டாக்டர் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின்பு பார்க்கலாம் என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

பின்னர் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை பாராசிடமால் மாத்திரை மட்டும் கொடுத்து கொண்டே வந்தேன்! காய்ச்சல் குறைந்த பாடு இல்லை! இரண்டாவது நாளும் அது போலவே! இருவருக்கும் ஒன்றுமே சாப்பிட முடியவில்லை! அப்படியே கட்டாய படுத்தி குடுத்தாலும் வாந்தி வந்து அத்தனையும் வெளியேறி விட்டது! கிட்டத்தட்ட இரண்டு நாட்களும் எதுவும் சாப்பிடவில்லை என்பது தான் உண்மை! மூன்றாவது நாள் பெரிய பையனுக்கு , உடம்பு முழுக்க தடிப்புகள் தோன்ற ஆரம்பித்தது!

dengue5

வீட்டில் இருக்க முடியாமல் , உடனே ஹாஸ்பிடல் சென்று , இரத்த பரிசோதனை இருவருக்கும் செய்து விட்டு வந்தோம்! பின் சாயுங்காலம் , டாக்டரை சந்திக்கும் போது தான் தெரிந்தது , இருவரும் ஒரு வித வைரல் காய்ச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று!! தட்டணுக்கள் மிகவும் குறைந்துள்ளது , எனவே உடனடியாக ஹாஸ்பிடலில் இருவரையும் அட்மிட் செய்து விடுவது நலம் என்று அவர் அறிவுறுத்தவே , உடனடியாக அவ்வேலையில் இறங்கினோம் ! அப்போ கூட , இருவருக்கும் வந்திருப்பது டெங்கு காய்ச்சல் என்று தெரியாது ! மேலும் டாக்டர் சொன்னார் , இது வைரல் காய்ச்சல் என்பதால் மருந்து எதுவும் கிடையாது! சலைன் (Saline ) ஏற்றுவது ஒன்றே வழி என்று சொன்னார்! சலைன் என்றால் உப்பு கலந்த நீர்! அது நம் உடம்பினுள் இருக்கும் கிருமிகளை அழிக்க வல்லது! மேலும் , உடம்பில் நீர் சத்து குறையாமல் , உடம்பை காத்து கொள்ளும்! அன்று இரவே , ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி சலைன் இருவருக்கும் நரம்பு வழியாக ஏறி கொண்டிருந்தது! சிறிது நேரத்திலேயே , இருவருக்கும் நன்கு வியர்த்து கொட்டியது! என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை ! ஆனால் , மிக லேட்டாகத்தான் புரிந்தது , இந்த காய்ச்சல் ஏறும் , இறங்கும் வகையை சார்ந்தது என்று !

dengue7

அடுத்த நாளும் இதே கதை தான்! சலைனொடு சேர்த்து வாந்தி இல்லாமல் இருக்க ஏதோ மருந்து , அப்புறம் ஏதோ ஆண்டிபயாடிக் என்று ஏற்றினார்கள்! மேலும் , சரும தடிப்புகளை போக்குவதற்கும் மருந்து கொடுத்தார்கள் ! சாப்பாடு ஒன்றும்  உள் செல்லவில்லை! மேலும் , டாக்டரும் எதையும் வற்புறுத்தி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்ததால் நான்காவது நாளாய் அவர்கள் எதுவும் சாப்பிட வில்லை! ஐந்தாவது நாள்  தான் கொஞ்சமாக  இட்லி, சாப்பிட வேண்டும் என்ற கடனுக்கு இரண்டு மூன்று வாய் வாங்கி கொண்டார்கள் ! அன்றும் இரத்த பரிசோதனை செய்ததில் , ஒருவனுக்கு தட்டணுக்கள் ஏறியும் , மற்றொருவனுக்கு , தட்டணுக்கள் மிக இறங்கியும் காணப்பட்டது! மிகுந்த மன சலனம் உண்டான தருணங்கள் அவை!

மனம் கேட்காமல் , இரத்த பரிசோதனை ரிப்போர்டை  ஒரு டாக்டர் நண்பருக்கு  அனுப்பி கேட்டதற்கு , அவர் தட்டணுக்கள் குறைந்திருந்தாலே அது டெங்கு தான் என்று அடித்து கூறினார்!  நாங்கள் இருப்பது ஆந்திராவில்! ஏனோ , இங்கே , டாக்டர்  டெங்கு என்றே குறிப்பிடவில்லை! அதற்குள் உறவினர்களுக்கு செய்தி பரவ , உடனடியாக தகவல் அறிந்தோர் டெங்கு பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டனர் !அதிலே என் தாய் மாமா எனக்கு நிலவேம்பு பற்றியும் , பப்பாளி இலைச் சாறு பற்றி   எடுத்துரைத்து , அந்த இரு கஷாயத்தையும்  உடனடியாக பிள்ளைகளுக்கு கொடுக்க அறிவுறுத்தினார்!  என் பெற்றோர்கள் , எனக்கு உதவி செய்வதற்காக , இங்கே கிளம்பி வந்து விட்டனர் !வரும் போது அவர்கள் நிலவேம்பு கஷாயம் செய்வதற்கான மருந்தையும், தமிழ் நாட்டிலிருந்து எடுத்து கொண்டே வந்தனர்!எனக்கு அந்த நேரத்தில் நிலவேம்பு மற்றும் பப்பாளி இலை சாறின் மகத்துவத்தை  பற்றி , தக்க சமயத்தில் எடுத்து கூறி என்னை அக்கஷாயத்தை என் பிள்ளைகளுக்கு கொடுக்க என் மனதை தயார் செய்த அத்தனை உறவினர்களுக்கும் நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன் ! அந்த நிலவேம்பு சாறு கொடுத்த பிறகு நடந்தவை எல்லாம் அத்தனையும் நம்ப முடியாத ஆச்சரியங்கள் !!

10ml நில வேம்பு கஷாயம்

10ml நில வேம்பு கஷாயம்

நில வேம்பு கஷாயம் குடித்த ஓரிரு நாளில் , என் பிள்ளைகள் இருவருக்குமே , சிறிதளவு பசி எடுக்க ஆரம்பித்தது! ஓரளவு சாப்பிட முடிந்தது அவர்களால்!  நித்தம் , காலையில் , அவர்கள் சாப்பிடுவதற்கு , பதினைந்து நிமிடம் முன்பு , நிலவேம்பு கஷாயத்தை ஒரு 10ml கசக்க கசக்க குடிக்க வைத்தேன்! அதன் பிறகு , ஒரு நாள் களித்து எடுத்த இரத்த பரிசோதனையில் , தட்டணுக்கள் கிடு கிடுவென்று ஒரே நாளில் உயரவில்லை என்றாலும் , ஓரளவு உயர்ந்திருந்தது! அடுத்து வந்த நாட்களில் , பசி நன்றாகவே எடுக்க , அவர்களுக்கு பிடித்த , ஆரோக்கிய உணவு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சாப்பிட வைத்தோம்! காய்ச்சல் வந்து கொண்டும் போய் கொண்டே தான் இருந்தது! ஆனால் , காய்ச்சலின் அளவும் குறைந்திருந்தது! அதாவது 105 என்று வந்த காய்ச்சல் இப்போ 103 102 என்று வந்து கொண்டிருந்தது! அடுத்தடுத்து வந்த நாட்களில் , தட்டணுக்கள் சர்ரென்று  மேலே உயர்ந்து விட்டது!  காய்ச்சலும் படிப்படியாக 100 99 என்று குறைந்து கொண்டே வந்தது! இந்த நில வேம்பு கஷாயம் , பசியை தூண்டி விட்டது போக , உடம்பு வலியையும் நீக்கி விடுகின்றது!

dengue6

பப்பாளி இலை சாறு கூட ஒரே ஒரு நாள் தான் கொடுத்தேன்! பப்பாளி சாறின் மகத்துவம் பற்றி அறிய இங்கே கிளிக்  செய்யவும்! மேலும் நில வேம்பு கஷாயம் எப்படி செய்ய வேண்டும் என்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம்.பிச்சையா குமார் தெரிவித்துள்ளார். அதை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! இந்த இணைப்பை  எங்களுக்கு தக்க சமயத்தில் கொடுத்து உதவிய  நண்பருக்கு இங்கே நன்றி சொல்லியே ஆகணும்! கஷாயம் எப்படி செய்யணும்! குழந்தைகளுக்கு எவ்வளவு கொடுக்கணும் , எத்தனை முறை கொடுக்கணும் என்பதை கட்டாயம் இணைப்புகளுக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !

டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு அதிக நீர்ச்சத்து உள்ள ஆகாரங்கள் கொடுப்பது நல்லது! சாத்து குடி ஜூஸ் , மாதுளை ஜூஸ் , பப்பாளி பழம் போன்றவை மிகவும் நல்லது!காய்கறி சூப் , அசைவம் சாப்பிடுபவர்கள் ஆட்டின் நெஞ்செலும்பு சூப் போன்றவை ரொம்பவே நல்லது! நீர்சத்து அதிகமான ஆகாரங்கள் உட்கொள்ளும் போது , தட்டணுக்கள் எண்ணிக்கையில் விரைவில் அதிகமாகும்!

டெங்கு காய்ச்சல் மிக மோசமானது! கொசு கடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்! அப்படியே கடித்து டெங்கு காய்ச்சல் வந்து விட்டாலும் , முறையே சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்! நில வேம்பு கஷாயமும் , பப்பாளி இலை சாறும் மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுத்து கொண்டால் , விரைவில் மீண்டு வெளியே வந்து விடலாம்! நன்றி !

 

 

Posted in அறிவியல், வகைப்படுத்தப்படாதது | Tagged , , , | 15 பின்னூட்டங்கள்

தற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன ???

su8

ஆத்திர அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒன்று தான் இந்த தற்கொலை! அது என்ன தேங்காய் சட்னி செய்வது போல் அத்துணை  சுலபமா?? தற்கொலை செய்ய முடிவெடுத்தவுடன் என்ன செய்யணும் என்று கூட சத்தியமாக எனக்கெல்லாம் தெரியாது! ஏதோ திரைப்படங்களை பார்க்க போய் , தூக்கு மாட்டி கொள்வது , தூக்க மாத்திரை சாப்பிடுறது , கையில் நரம்பை வெட்டி கொள்வது , மலை உச்சிக்கு சென்று குதிப்பது , நம் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று எதிரே வரும் வாகனம் மீது மோத விடுவது, பூச்சி மருந்து , காலாவதியான மருந்து , பாத்ரூம் கிளீனர் , ஆசிட் ஆகியவற்றை குடிப்பது , நம்மை நாமே மண்ணென்னை ஊற்றி கொளுத்தி கொள்வது , ஆழமான நீர் நிலைகளில் சென்று விழுந்து உயிரை விடுவது போன்ற வழிகள் அரை குறையாய் தெரியும்! இப்படி அரைகுறையாக தெரிந்து கொள்வது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு…  வாழ்க்கையை வாழ வழி தெரியாதோர் , சாவை அடைய வழி தேடுகின்றனர்! இத்தகைய மன நிலையில் உள்ளவரிடம் போய் .. ஏ.. பிளீஸ் பா.. தற்கொலை எல்லாம் செய்யனும்னு நினைக்காத.. அப்படி இப்படின்னு அறிவுரை கொடுத்தால் எல்லாம் வேலைக்கு ஆகாது! வாழ்க்கையை வாழ பயந்தவர்களுக்கு சாவின் மீது  பயத்தை குடுக்க வேண்டும் ..  அத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கவே இந்த மிரட்டல் பதிவு! வேறு எந்த நோக்கமும் இல்லை !

தற்கொலை செய்து கொண்டால் வலி தெரியாம மேல போய் சேர்ந்துடலாம்னு யாரு சொன்னா?? உங்களுக்கு ஒன்னு தெரியுமா நாமே நம் கைகளால் கழுத்தை நெறித்து நம்மை நாமே கொன்று விட இயலாது! அது போல் மூச்சு விட  முடியாதபடி  நம் மூக்கை நாமே இறுக்கி பிடித்தால் மூர்ச்சை ஆகி விடுவது என்னவோ உண்மை தான்.. ஆனால் சிறிது நேரத்தில் நாம் நம்மை அறியாமலேயே சுவாசிக்க ஆரம்பித்து விடுவோம்! அது எப்படி சாத்தியம்  என்று வியப்பவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு கூறுகிறேன்.. நாம் இரவில் தூங்கும் போது நம்மை நறுக் என்று கடித்த கொசுவை தூக்கத்திலேயே நம் கைகளால் அடித்து விரட்டுவோம் அல்லவா அதே போல் தான் இதுவும் ! நம் உடம்பு எப்பவும் விழிப்பா இருக்கும்.. அவ்வளவு சுலபமாக நாம் நம் உடம்புக்கு எந்த வித தீங்கும் செய்ய இயலாது!!

நம்ம மனித உடம்பை எப்படி வடிவமைத்து இருக்கிறார்கள் என்பதை மட்டும் நீங்கள்அறிந்தால்  அசந்து போவீர்கள் போங்கள்! எந்த தருணத்திலும் நம் மனித உடம்புக்கு உடனே சாவை தழுவி கொள்ள விருப்பமே கிடையாது… எவ்வளவுக்கு எவ்வளவு தன்னை தானே பாதுகாத்து கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் உடம்பும் ,நம் மனதும் விழிப்பாக இருந்து நம்மை காக்கும்! ஒரு உதாரணத்துக்கு , உங்களை நீங்களே மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொள்ளுகிறீர்கள் என்று வையுங்கள் என்ன நிகழும் தெரியுமா?? உங்கள் உடம்பு  உடனடியாக தாயின் கருவறை உள்ளே சுருண்டு இருக்கும் குழந்தை போல் சுருண்டு கொள்ளும்! எதற்காக நம் உடம்பு , இவ்வாறு சுருண்டு கொள்கிறது என்றால் நம் உடம்புக்கு தீயினால் பலத்த சேதம் உண்டாகாமல் தவிர்ப்பதற்காக !  இந்த சுருண்ட நிலையை வைத்து தான் காவலர்கள், தீயினால் கொளுத்தப்பட்டவர் , கரியாவதற்கு முன் உயிரோடு இருந்தாரா இல்லை உயிரோடு கொளுத்தப்பட்டாரா என்பதை அறிந்து கொள்வர்!

அடுத்து பதிய போகும் விஷயங்கள் அனைத்தும் உலகில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்! எல்லோருக்கும் வாழ்வில் பிரச்சனைகள் வரும் போகும்… பிரச்சனைகளை கண்டு பயந்து சாவை அடைய வழி தேடுபவர்கள் முதலில் அவ்வழிகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அறிவது அவசியம்! அவ்வாறு அறியும் போது மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி  கடினமானதா இல்லையா  என்பது புரிய வரும் !

துப்பாக்கி மூலமாக தற்கொலை

su1

துப்பாக்கி மூலமாக உயிரை மாய்த்து கொள்ள விரும்புபவர்கள் எல்லோரும் சினிமாவில் காட்டுவது போல் ,துப்பாக்கி வெடித்தவுடன் செத்து போனதாக சரித்திரம் இல்லை! ஒன்று கோமா நிலைக்கு தள்ளப்படுவர் இல்லையெனில் மனநிலை சரி இல்லாது போவர்.. அது ஏனெனில் என்ன தான் நாம் எப்படியாவது துப்பாக்கியை வாயினுள் வைத்து, வெடித்து ,பொட்டுனு போயிடனும் என்று ஆசைப்பட்டாலும் நாம் நினைப்பது மாதிரியே எல்லாம் நடந்து விடுவதில்லை! கடைசி நேரம் எழும் பதட்டத்தில், துப்பாக்கி ஏனோ தானோ என்றுநம் கைகளால் பிடிக்கப்படுவது தான் உண்மை! அந்த நிலையில் துப்பாக்கியின் விசை அழுத்த படும்போது , அதனுள் இருந்து சீறி பாயும் புல்லட், கணப்பொழுதில் நம் உயிரை மாய்க்குமா இல்லை நாம் வாழப் போகும் ஒவ்வொரு பொழுதும் நம் உயிரை வாங்குமா என்பதை கண்டிப்பாக நாம் அறிய வாய்ப்பு இல்லை ! மேலும், தன் குடும்பத்தினர் மீது , தீரா பாசம் கொண்டவர் யாரும் இந்த வழியை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் ! ஏனெனில் , உங்களின் கடைசி ஞாபகம் , உங்கள் மலர்ந்த முகமாகத்தான் உங்கள் குடும்பத்தினருக்கு இருக்க வேண்டும், மூளை சிதறி மரித்த முகமாக அல்லவே!

வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று எதிரே வரும் வாகனம் மீது மோத விடுவது

su3
தற்கொலை செய்வதற்கு இது ஒரு வழி! இந்த வழியை தைரியமாக தேர்ந்தெடுத்து அதை செய்து முடிக்க நினைப்பவர்கள் அத்தனை பேரும் கடைசி நிமிடத்தில் தங்களை அறியாமலேயே கோழைத்தனமாக ப்ரேக்கை பிடித்து விடுவது தான் உண்மை ! மேலும் , மோதலினால் உண்டாகப் போகும் தீங்கில் இருந்து தங்களை காப்பாற்ற எண்ணி சுருண்டு படுத்து கொள்வது , முகத்தை கைகளால் மறைத்து கொள்வது போன்றவற்றை மறக்காமல் செய்வதுண்டு ! இதை தான் உள்ளுணர்வு என்று சொல்வர்! ஆசை ஆசையாய் சாக துணிந்த பின்னும் உயிரை கையில் கெட்டியாய் பிடித்து கொள்வதை எல்லாம் என்னவென்று சொல்ல! கடைசி நிமிடத்தில் வாழ விருப்பம் வந்து என்ன பிரயோஜனம், அதற்குள் மோதிய மோதலில் வண்டி தீ பிடித்து உங்களையும் சேர்த்து கரி கட்டையாகி விடும்! அப்படியே வண்டி தீ பிடிக்க வில்லை என்றாலும் , மோதலில் உண்டான காயங்களினால் உண்டாகும் இரத்த கசிவுகளால் , அதீத துன்பத்தில் உயிரை விடுவது நிச்சயம்! இது தேவையா?? அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் , காப்பீட்டு முகவர்கள் இது போன்று வாகன விபத்துகளில் பலியானவர்கள் , விபத்தில் பலியானார்களா இல்லை தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை அறிய , டயரின் குறி பதிந்த தூரத்தின் அளவை அளந்து பார்த்து , பலியானவர் எந்த இடத்தில் வண்டி ஓட்டி வரும் போது  பிரேக்கை பிடித்தார் என்பதை அறிந்து கொள்வர்! அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா கதை தான் !

ஆழமான நீர் நிலைகளில் சென்று விழுந்து உயிரை விடுவது

su4
இதுவும் அவ்வளவு சுலபமான தற்கொலை வழி எல்லாம் கிடையாது! ஆழமான நீரில் விழுந்தவுடன் என்ன ஆகும் தெரியுமா?? ஆழமான நீர் நிலையின் உள்ளே, உயிர் விடுவதற்காக ,குதித்த பின்னரும் , நம்மை அறியாமலேயே , நாம் நம் உயிரை காக்க ஒரு போராட்டத்தில் ஈடுபடுவோம்! அவ்வாறு கையை , காலை அசைத்து போராடும் போது , நம் உடம்பில் இருக்கும் தசைகளில், பாலமிலம்(Lactic Acid ) கட்டும்… அவ்வாறு பாலமிலம் தசைகளில் கட்டப்படும் நேரம் , நம்  உடம்பில் பிராணவாயு இல்லாமல் போகும் போது , ஏதேனும் சில தசைகளில் அல்லது  எல்லா தசைகளிலும் ஒரு இறுக்கம் உண்டாகும்! அது மிகவும் துன்பமான வலியை தரக்கூடியது! இந்த நரக வேதனையில் இருந்து விடுபடுவதற்காகவாவது ,   உடனடியாக தண்ணீரில் இருந்து வெளியே சென்று காற்றை சுவாசிக்கவே அந்நிமிடத்தில் நம் மனமும் உடம்பும்  விரும்பும்! தன் உயிரை ஆழமான நீர் நிலையினுள்ளே குதித்து மாய்த்து கொள்ள விரும்பி , பின் உயிர் பிழைத்தவர்கள் இத்தகைய துன்பத்தை ஒத்து கொண்டதுண்டு! ஆக , இவ்வழியும் நாம் நினைத்தது போல் ஒன்றும்  சுலபமானது இல்லை!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொள்ளுதல்

su5
அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முடிவு எடுத்தது எல்லாம் சரி தான்… ஆனால் அம்மாத்திரைகள் நிஜமாகவே நம் உயிரை மாய்த்து கொள்ள உதவுமா இல்லை நம் உடம்பில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு தீங்கு விளைவித்து நம்மை சொல்லொனா துயரத்தில் ஆழ்த்துமா என்று முதலில் அறிந்து கொள்வது முக்கியம்! அவ்வாறு அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டாலும் , அதிக விழிப்போடு இருக்கும் நம் உடம்பு , நம் உயிரை காக்க , வாந்தியை தூண்டி விட்டு , விஷத்தை நம் உடம்பை விட்டு அப்புறப்படுத்தும் வழியில் ஈடுபடும்! யார் கண்டார்கள் சிறிது நேரத்தில் நாம் கண் விழித்து, நான் எங்க இருக்கிறேன் என்று கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை!

ஆசிட் , பாத்ரூம் கிளீனர், பூச்சி மருந்து போன்றவற்றை குடிப்பது

su6

மாத்திரை எல்லாம் நமக்கு லாயக்கு படாது என்று அவசரப்பட்டு , கண்ணுல படுற ஆசிட் , பாத்ரூம் கிளீனர் , பூச்சி மருந்தெல்லாம் குடிச்சா உயிர் சுலபமா போகுமான்னு தெரியல.. ஆனா உள்ளே செல்லும் இவ்வகை வேதியல் பொருட்கள் நம் உடம்பின் உள் இருக்கும் உறுப்புகளை தின்றது போக.. முடிவில் நம்மையும் உயிரோடு கதற கதற தின்று விடும் என்பது தான் கசப்பான உண்மை!

தூக்கு மாட்டி கொள்வது

su2
தற்கொலை எண்ணம் வந்தவுடன் ஒரு மின்விசிறியும் , ஒரு சீலையும் இருந்தா போதும் சுலபமா காரியத்தை முடிச்சிடலாம்னு நினைப்பவர்களை என்ன செய்வது! அதிக வலி தெரியாது தூக்கு மாட்டி கொள்ள விரும்புபவர்கள் , தங்கள் எடைக்கு தகுந்தாற் போல் கயிற்றை முதலில் தேர்ந்து எடுக்க தெரிந்து கொள்ளனும்! மேலும் கயிறு எவ்வளவு நீளத்துக்கு தொங்க விட வேண்டும் போன்ற கணக்கு போட தெரிந்திருக்க வேண்டும்! எனக்கு சும்மாவே கணக்கு வராது.. இதிலே மேலே சொன்னதற்கு உண்டான சரியான கணக்கு என்ன என்று தயவு செய்து யாரும் கேட்டுடாதீங்க! எனக்கு தெரியாது! கயிற்றின் நீளம் சின்னதாக இருந்தா கழுத்து நெறிப்பட்டு துடி துடித்து சாவீர்கள்! கயிறு ரொம்ப நீளமாக இருந்தா , நீங்கள் தொங்க முயலும் போது , உங்கள் உடம்பு கயிற்றோடு சேர்ந்து ஆடுகின்ற வேகம் தாங்க மாட்டாது தலை தனியே துண்டிக்க பட்டாலும் பட்டு விடும்! நிறைய கேசுகளில் எசக்கு பிசக்காக தூக்கு மாட்டி கொள்ள முயன்று , தலையின் உள்ளே அழுத்தம் அதிகரித்து , கருவிழி வெடித்து, முழி பிதுங்கி இறந்தவர்கள் பலர்!மேலும் , நிறைய கேசுகளில் , முதுகெலும்பு படாரென்று முறிந்து விடுமாம்! இதென்னையா வம்பா போச்சுனு நினைக்க தோணுது இல்லையா! தூக்கு மாட்டி கொண்டு இறந்தவர்கள் பலர் கடைசி நிமிடத்தில் , கழுத்தில் தூக்கு மாட்டி கொள்ளாமல் இருக்க , கழுத்தை இறுக்கும் கயிற்றை தடுக்க முயன்று , போராடி , கழுத்தில் நகத்தை பதிய வைத்து இறந்தவர்கள் ஏராளம்! இது ஒன்று போதும் இது அப்படி ஒன்றும் சுலபமில்லை என்பதை அறிவதற்கு!மேலும் , கயிற்றினில்  விரைந்து ஆடும் உடம்பின் எடையை தாங்கும் அளவுக்கு உதவக்கூடிய எந்த பொருளும் வீடுகளில் இ ருப்பது இல்லை!

உ ச்சியான இடத்தின் மேலிருந்து குதித்தல்

su9
மிக உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் போது , பயத்திலேயே சாவு நம்மை தழுவி விடும் என்று கண்டிப்பாக தப்பு கணக்கு போட வேண்டாம்! இருபது மாடி உயரத்தில் இருந்து தற்கொலை செய்ய நினைத்து ,குதித்து , உயிர் பிழைத்தவர்களும் உண்டு…ஒற்றை மாடியின் மேலிருந்து குதித்து உயிரை விட்டவரும் உண்டு! அது எப்படி 20 மாடியிலிருந்து குதித்து உயிர் பிழைத்தார் என்று ஆச்சரியப்படுபவர்களே, நாம தான் ஏற்கனவே மேலே பார்த்தோமே , அவ்வாறு அதிக உயரத்தில் இருந்து குதிக்கும் போது , நம் உடம்பு எப்பவும் விழிப்பாக இருக்கும் காரணத்தினால் , தன்னை தானே முடிந்த வரை பாதுகாத்து கொள்ள வேண்டி அந்தரத்தில் விழும் போதே நன்கு சுருண்டு கொள்ளும்! அதனால் தரையில் விழும் போது , கை , கால் உடைந்து போகலாம் , ஆனால் உயிர் போகாது!

கை நரம்பை வெட்டி கொள்ளுதல்

Cartoon image of a male person with blonde hair, wearing light blue collared long sleeved shirt, black pants and shoes, sits on the surface, as he tries to slash his left wrist with a stainless kitchen knife, right hand holding the brown wooden handle, blue eyes have a look of sadness and depression, mouth frowning in sadness

Cartoon image of a male person with blonde hair, wearing light blue collared long sleeved shirt, black pants and shoes, sits on the surface, as he tries to slash his left wrist with a stainless kitchen knife, right hand holding the brown wooden handle, blue eyes have a look of sadness and depression, mouth frowning in sadness

இந்த முறையை சினிமாவில் அடிக்கடி கண்டிருக்கிறோம் அல்லவா! மிக எளிதாக மணிக்கட்டில் ஒரு வெட்டு , இரத்தம் நிற்காமல் ஒழுகி கொண்டே இருக்கும் , முழுதாய் வெளியேறி முடிந்தவுடன் உயிரும் போய் விட்டு இருக்கும்! இப்படி எல்லாம் காண்பித்து , நம் காதில் பூ சுற்றவே முயலுகிறார்கள் சினிமா காரர்கள்! அதை எல்லாம் தயவு செய்து நம்பாதீர்கள்! கையிலே எத்தனை இரத்த குழாய் செல்கிறது , இதுல எதை வெட்டுனாலும் சாவு நிச்சயம் கிடையாது! நாம் வெட்ட வேண்டிய முக்கியமான இரத்தகுழாய் தசைநாண்களுக்கு இடையே தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கும்! அதை வெட்டுவதற்கு , சினிமாவில் காட்டுவது போல் ஒத்த வெட்டேல்லாம் பத்தாது! நிறைய தடவை வெட்டுனா தான் நீங்க நினைத்தது கொஞ்சமாவது ஈடேறும்! அப்படியே நீங்கள் தைரியமாக கை நரம்பை வெட்டி கொண்டாலும் , இரத்தம் வெளியேறி மயக்கம் வருவது என்னவோ உண்மை தான்.. ஆனால் , சிறிது நேரத்தில் இரத்த காயம் அடைந்து(Blood Clot ) உங்களை நீண்ட நெடும் தூக்கத்துக்கு செல்ல விடாமல் தடுத்து எழுப்பி விட்டு விடும்!

தண்டவாளத்தில் தலையை வைத்தல்

su10
தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்ய விரும்புபவர் , பயமின்றி தண்ட வாளத்தில் தலையை வைப்பது என்னவோ உண்மை தான்! ஆனால் ரயிலின் ஓசை நெருங்க நெருங்க ,  உள்ளம் பதைபதைத்து , பயந்து , நடுங்கி , ஒரு மிக துன்பமான சாவை எதிர்கொள்வர்!

இவ்வளவு தூரம் தற்கொலைக்கான வழிகளை விவரித்த பிறகும் ஒருவர் தற்கொலை முடிவை எடுப்பார் ஆனால் அவர் மிகுந்த தைரியசாலியாக தான் இருக்க வேண்டும்! ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தற்கொலை செய்து மடிந்தவர்களை இவ்வுலகம் கோழைகளாகவே தங்கள் மனதில் நினைவில் வைத்திருப்பார்! வாழ்க்கையில் துன்பம் வரும் போகும்.. உயிர் போனால் போனது தான்! வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதில் இருந்து மீளுவதற்கான வழியை தான் தேட வேண்டும்! அற்பமாக தற்கொலை செய்வதற்கான வழிகளை இல்லை! இன்றைய கால கட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர் கூட இத்தகைய துயரமான முடிவுகளை எடுப்பதற்கு காரணம் அவர்களது அறியாமையே! அவசரப்பட்டு தற்கொலை என்னும் வழியை தேர்ந்தெடுப்பது பெரியதல்ல.. பாதி வழியில் மனம் மாறினால் கூட திரும்ப வந்த வழியே வருவது என்பது இயலா காரியம்!! வாழ்க்கையில் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் ஆற அமர யோசித்து முடிவெடுப்பதே உத்தமம்! நன்றி!

 

Posted in வகைப்படுத்தப்படாதது | 18 பின்னூட்டங்கள்

ஆஸ்துமாவை புரிந்து கொள்ளலாம் வாங்க

asthma1

ஆஸ்துமா என்ற பெயரை பெரும்பாலும் அனைவரும் அறிவர்! ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்! இந்த ஆஸ்துமா நோய் , உனக்கு தான் வரும் , எனக்கு தான் வரும் என்றெல்லாம் கிடையாது.. யாருக்கு வேண்டுமானாலும் , எந்த வயதிலும் , எந்த கால நிலையிலும் வரக்கூடும்!இதை முழுமையாக குணப்படுத்துவதற்கு என்று மருந்து ஒன்றும் கிடையாது! ஆனால், இந்த நோயை , சில மருந்துகள் மூலம் , நம் கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். அவை , எவை எவை என்று தெரிந்து கொள்ளும் முன்னே , ஆஸ்துமா என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்!

ஆஸ்துமாவை தெரிந்து கொள்ளும் முன்னே , சுவாசப்பாதையை ஒரு தடவை சுற்றி பார்த்து வந்து விடுவோம்.  நாம் நம் மூக்கின் வழியாக சுவாசிக்கிறோம்… அவ்வாறு சுவாசிக்கப்படும் காற்று, நம் மூக்கின் உள்நுழைந்து , சுவாசப்பாதை வழியாக , நுரையீரலை அடைந்து , பின் வெளியேறுகிறது!

asthma3

ஆஸ்துமாவால் வருந்துபவர்களுக்கு , இந்த சுவாசப்பாதை வீக்கமடைந்து இருக்கும். அதனால் , அவை வழிநெடுகிலும் , உப்பிய நிலையில் , மிகவும் உணர்ச்சிமிக்கதாக இருக்கும் .அதாவது , சில வகை பொருட்கள்,  சுவாசிக்கும் காற்றோடு சேர்ந்து , சுவாசப்பாதையின் உள்நுழையும் போது , இந்த உணர்ச்சி மிகுந்த சுவாசப்பாதை ,  சிறிது அதிகப்பிரசங்கித்தனமாகத்தான் நடந்து கொள்ளும்!

asthma2

சுவாசப்பாதை எவ்வாறு அதிகப்பிரசங்கித்தனமாய் நடந்து கொள்ளும் என்றால் , சுவாசப்பாதையின் நெடுகிலும் உள்ள தசைகள் இறுகிவிடும். அவ்வாறு , தசைகள் ஆனது , தளர்வாக இல்லாமல் , இறுகி விடுவதால் , சுவாசப்பாதை குறுகிவிடும். அதனால் , நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படும் பிராணவாயுவின் அளவு குறைந்து போகும். மேலும் , ஆஸ்துமாவால் அவதியுறுபவர்களுக்கு , சுவாசப்பாதை வீக்கம் கொண்டிருப்பதால் , சுவாசப்பாதை மேலும் குறுகிப்போகும் .இது பத்தாது என்று , சுவாசப்பாதையில், இருக்கும் உயிரணுக்கள் , தேவைக்கும்  அதிகமாக , சளியை சுவாசப்பாதையில் சுரந்து , பாதையை  முடக்கி  விடும்! இவ்வாறு நடக்கும் தொடர் நிகழ்வுகளின் விளைவாய் சுவாச காசம்(ஆஸ்துமா ) தோன்றி விடுகிறது!

என்ன மாதிரி காரணங்களால் ஒரு சிலருக்கு இந்த ஆஸ்துமா உருவாகிறது என்று அடுத்து பார்க்கலாம்!
1) உணவினால் உண்டாகும் ஒவ்வாமை! அதாவது, முட்டை , மீன் , பால் , கோதுமை ,சோயா , பழங்கள் ,  நிலக்கடலைபோன்றவை உண்ணப்படும் போது சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும்! அவை, அவர்களுக்கு ஆஸ்துமாவை உண்டு பண்ணி விடும்!மேலும் , உணவை பதப்படுத்துவதற்க்காக சேர்க்கப்படும் வேதியல் பொருட்களும் மற்றும் உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் ஆகியவையும் ஆஸ்துமாவை உண்டு பண்ணக் கூடியவை!

asthma5

2)சிகரெட் புகையை சுவாசிப்பதனால் ஆஸ்துமா உண்டாகலாம்!

asthma6

3) தூசி பூச்சிகளால்  ஒருவற்கு ஆஸ்துமா உண்டாகலாம்.. இந்த தூசி பூச்சிகள் எல்லோருடைய வீட்டிலேயும் இருக்க கூடிய ஒன்று தான்! இந்த தூசி பூச்சிகள் நம்மை அண்டாமல் இருக்க, வீட்டில் உள்ள தலையணை உரைகள் , மெத்தை விரிப்புகள், திரை சீலைகள்  ஆகியவற்றை மிக சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்! அடிக்கடி அவற்றை மாற்றி கொண்டே இருப்பது நலம் பயக்கும்!

asthma4

4)வாகனங்கள் வெளியேற்றும் புகை , தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி காற்றில் கலக்கும் புகை , பஞ்சு தூசி , கட்டடத்தை இடிப்பதனால் காற்றில் கலந்து விடும் தூசி என்று சகலமும் ஆஸ்துமாவை கிளப்பி விடும் முக்கிய காரணிகள் தாம்!

asthma7

5) கரப்பான் பூச்சியின் கழிச்சல்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்! இந்த ஒவ்வாமையினால் அவர்களுக்கு ஆஸ்துமா உண்டாகலாம் !

cockro

6) உரோமம் அதிகம் உள்ள செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ஆஸ்துமா உண்டாகலாம்!

Pet-Allergies

7) குளிர் கபசுரத்தால்(Flu) அவதி படுபவர்களுக்கு , ஆஸ்துமா உண்டாகலாம்!

7-Things-You-Need-to-Know-about-Asthma-and-Flu-722x406

8) சைனஸ் நோய் தொற்றினால் அவதிபடுபவர்களுக்கு  , வேதியியல் பொருட்களை வேலை நிமித்தமாய் சதா நுகருபவர்களுக்கு, அமில எதுக்குதலின் பிரச்சனை உள்ளவர்களுக்கு  ஆஸ்துமா வரக் கூடும்!

GERD

9) அதிகப்படியான உடல் பயிற்சி செய்யும் போதும் , சில வகையான மருந்துகளை உட்கொள்ளும் போதும் , ஈரத்தன்மை அதிகம் உள்ள காற்றை சுவாசிக்கும் போதும் , சில நறுமணங்களை நுகரும் போதும் , ஒரு சிலருக்கு ஆஸ்துமா உண்டாகலாம்!

cough

10)அதிகப்படியாக உணர்ச்சி வசப்பட்ட நேரங்களில் உண்டாகக்கூடிய அதிவளியோட்டத்தால்(Hyper Ventilation) ஒரு சிலருக்கு ஆஸ்துமா உண்டாகலாம்!

maxresdefault

இந்த ஆஸ்துமா என்னும் சுவாச காச நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கு என்று  மருந்து எதுவும் இல்லை! ஆனால் , சில மருந்துகளை , மருத்துவரின் அறிவுரையோடு  முறையாக எடுத்து கொள்ளும் போது , ஆஸ்துமாவை நம் கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்! அவை எவை எவை என்று அடுத்து பார்க்கலாம்!

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மருந்தை உட்கொள்ள உதவும் கருவியின் பெயர் இன்ஹேலர்(Inhaler)! இது ஒரு கையடக்க கருவி.  இந்த கருவியின் மூலம் ,  மருந்தை உட்கொள்ளும் போது ,மிக சுலபமாக  , மருந்து  நோயாளியின் நுரையீரலுக்கு நேரடியாக  சென்று அடையும்..  அது ஆஸ்துமாவால் அவதி படுபவர்களுக்கு , உடனடி ஆறுதல் அளிக்கும்! மாத்திரைகள் , ஊசி மூலம் மருந்து எடுத்து கொள்வதை விட , மருந்தை இன்ஹேலர் மூலம் எடுத்து கொள்ளும் போது உடனடி பலன் கிடைக்கும்!

சரி ஆஸ்துமாவை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ள அப்படி என்ன தான் மருந்து இருக்கிறது! அது என்ன மாய மந்திர மருந்து என்று தெரிந்து கொள்ளும் ஆவல் கண்டிப்பாக எல்லோருக்கும் இருக்கணும்..
அவை ,
1) உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டுகள்(Inhaled Steroid )
2) மூச்சு குழாயை தளர்த்தி விடும் மருந்து(Bronchodilator )

1)உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டு(Inhaled Steroid)
இது ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் மிக முக்கியமான மருந்து. ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு , சுவாசப்பாதை அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் என்று ஏற்கனவே பார்த்தோம்.. அதாவது , சுவாசப்பாதை வழி நெடுகிலும் வீங்கி போகுதல் , சுவாசப் பாதையில் எரிச்சல் உண்டாகுதல், கட்டுக்கடங்காத சளி சுரப்பு  போன்றவை… அதாவது சுவாசப்பாதை அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளாமல் பார்த்து கொள்ளும் இந்த மருந்து.. இதை அழற்சி எதிர்ப்பு மருந்து(Anti Inflammatory medicine ) என்று சொல்லலாம்! குழந்தைகள் , பெரியவர்கள் எல்லோருக்கும் மிக பாதுகாப்பானது இந்த மருந்து. இந்த மருந்தினால், ஒவ்வாமையினால் தூண்டப்படும் ஆஸ்துமா தடுக்க படும் . ஸ்டீராய்டு என்ற பெயரை கேட்டவுடன் , விளையாட்டு வீரர்கள் எடுத்து கொள்ளும் ஊக்க மருந்தோ என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம்! அதற்கும் இதற்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது !

2)மூச்சு குழாயை தளர்த்தி விடும் மருந்து(Bronchodilator)
ஆஸ்துமாவினால் அவதி படுபவர்களுக்கு, சுவாசப்பாதை குறுகி போகும் , வழி நெடுகிலும் தசைகள் இறுகி போகும் என்று பார்த்தோம் அல்லவா! இந்த மருந்து , நம் சுவாசப்பாதையை , காற்று சுலபமாக உள்ளே சென்று வெளியே வருவதற்கு ஏற்றாற் போல் நன்கு திறந்து விடும்!

இந்த Bronchodilators இரண்டு வகைப்படும்..
1)குறுகிய காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி(Short acting Bronchodilator)
2)நீண்ட காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி (Long Acting Bronchodilator)

1)குறுகிய காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி(Short acting Bronchodilator)
இதனை மீட்பு மருந்து(Rescue Medication ) என்று சொல்வர்.. எதிர்பாராமல் மிக கடுமையான ஆஸ்துமாவால் அவதி படுபவர்களுக்கு , உடனடி ஆறுதல் அளிக்கும் மருந்து இது! இந்த வகை மருந்து 2இல் இருந்து 4 மணி நேரம் வரை வேலை புரியும் . பொதுவாக , அதிக உடல் பயிற்சி மேற்கொண்ட பின்னே வரும் ஆஸ்துமாவால்(Excercise Induced Asthma ) அவதி படுபவர்கள் இந்த மருந்தை உடல் பயிற்சி செய்வதற்கு முன் எடுத்து கொள்வதுண்டு!

in2

2)நீண்ட காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி (Long Acting Bronchodilator)
இந்த மருந்தை நீண்ட காலத்துக்கு , ஒரு நாளைக்கு இரு தடவை என்ற கணக்கில் எடுத்து கொள்ளும் போது , ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியும்! இது குறுகிய காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தி(Short acting Bronchodilator ) போலே உடனடி ஆறுதல் தருவதற்காக குடுக்க படுவது அல்ல.. இதை நீண்ட நாள் எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த மருந்து ஆஸ்துமாவை தன் கட்டுக்குள் வைத்து கொள்ளும். இந்த மருந்தை , மருத்துவரின் பரிந்துரைப்படி , முறையாக நீண்ட காலம்எடுத்து கொள்ளும் போது , பெரியதாக எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டி வராது ! இதை கட்டுப்படுத்தும் மருந்து (Control Medication ) என்று சொல்வார்கள் . பெரும்பாலும், நீண்ட காலம் செயல் புரியும் மூச்சு குழாய் தளர்த்தியை (Long Acting Bronchodilator), உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டு(Inhaled Steroids) மருந்துகளோடு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

in1

இனி இந்த மருந்துகளை  எந்தெந்த வகைகளில் நம் நுரையீரலுக்கு கொடுக்கலாம் என்று பார்த்து விடலாம்.மருந்தை நேரடியாக நுரையீரலுக்கு அளிக்க மூன்று வகையான  வழிமுறைகள்  இருக்கின்றன..
அவை ,
1) Metered Dose Inhaler
அதாவது ஒரு தரம் கொடுக்க வேண்டிய மருந்தின் அளவை அளந்து பார்த்து கொடுக்க கூடிய இன்ஹேலர். இது பார்ப்பதற்கு ஒரு ஸ்பிரே கேனை(Spray  Can ) போல் இருக்கும். இதன் உள்ளே மருந்து  அதிக அழுத்தத்தில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும்.

asthma6

படத்தில் காட்டியவாறு , இந்த இன்ஹேலர்  அமுக்க படும் போது , மருந்து நம் மூச்சு காற்றோடு சேர்ந்து நுரையீரலை சென்றடையும்.

asthma5

இந்த இன்ஹேலர்  மூலம்,மூச்சு விட சிரமப்படும் குழந்தைகளுக்கு சுலபமாக மருந்தை கொடுக்க நினைப்பவர்களுக்கு ,கை கொடுக்க வென்றே உருவாக்கப்பட்டது தான் Spacer. இது குழாய் போன்று காட்சியளிக்கும் ஒரு உபகரணம்! இந்த Spacer குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது! இது இன்ஹேலரில் இருந்து  வெளி  வரும் மருந்தை சில நிமிடங்கள் தக்க வைத்து கொள்ளும்! சிறு குழந்தைகளால் மருந்தை டோஸ் குறையாமல் எடுத்து கொள்ள இந்த Spacer மிகவும் உதவியாக இருக்கும்.

asthma3

இந்த உபகரணத்தோடு ஒரு முகமூடியும்(Mask) சேர்ந்தே உபயோகிக்க படும்!

asthma4

asthma2

https://www.youtube.com/watch?v=hCAsW7OM9N

2)Dry powder Inhaler
இந்த வகை இன்ஹேலர்களில், மருந்தானது பவுடர் வடிவில் , உட்கொள்ள படுகிறது! பவுடர்களை ஒரு கேப்ஸ்யூலில் அடைத்து வைத்திருப்பார்! இந்த இன்ஹேலர்களை உபயோகிக்கும் போது ,மருந்தோடு சேர்த்து , அழமாக  மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.. இல்லையேல் , மருந்து முழுமையாக உள்ளே செல்லாமல் , இன்ஹேலரின் உள்ளேயே தங்கி விடும். ஆதலால் ,கடுமையான  ஆஸ்துமா தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு  , இந்த இன்ஹேலர்களை உபயோகம் செய்வது அவ்வளவு சுலபமாக இருக்காது !

asthma8          asthma9

asthma7

3) Nebuliser
இது மின்சாரத்தால் இயங்கும் ஒரு சாதனம்! இந்த சாதனம் , திரவ நிலையில் இருக்கும் மருந்தை , மூடு பனி போல் மாற்றி  கொடுக்க , ஒரு முகமூடியின் உதவியுடன்  மருந்து , நம் நுரையீரலை சென்று அடைகிறது! இந்த சாதனத்தின் மூலம் மருந்தை முழுமையாக எடுத்து கொள்ள 5 முதல் 10 நிமிடம் வரை ஆகும்! மேலே குறிப்பிடப்பட்ட இன்ஹேலர்களை சரி வர உபயோகிக்க தெரியாதவர்கள் , குழந்தைகள் ஆகியோருக்கு இந்த nebuliser  ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் !

asthma10

இந்த ஆஸ்துமா நோயை முழுமையாக குணப்படுத்த என்று மருந்து ஒன்றும் கிடையாது.. மேலே கூறிய வழிகளின் மூலம் நமது கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். மேலும் ஒவ்வாமை பிரச்சனையால் ஆஸ்துமா தூண்டப்பட்டு அவதிப்படுபவர்கள் , மருத்துவர் பரிந்துரைப்படி ,காலத்துக்கு ஏற்றாற் போல்  ஒவ்வாமை ஊசிகள்(Allergy shots ) எடுத்து கொள்வது ஆஸ்துமா பிரச்சனை வருமுன் காக்க உதவும்!நன்றி !

Posted in வகைப்படுத்தப்படாதது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏசி வாசிகள் கவனத்திற்கு..

images

வெயில் காலங்களில் , புழுக்கம் தாங்க முடியாமல் , ஏசி அறைகளில் தஞ்சம் புகுபவர்கள் ஏராளம்! அது என்ன ஏசி??  ஏசி என்ற ஆங்கில சொல்லை , அழகு தமிழில் , காற்றுச்சீரமைப்பி என்று சொல்ல வேண்டும்! ஆம் , நம் அறையில் உள்ள காற்றை , நாம் விரும்பும் வண்ணம் சீரமைத்து தருவதே இந்த ஏசியின் தலையாய வேலை! இந்த ஏசி என்பது யாது? அது  என்ன மாயம் , என்ன மந்திரம் செய்து , நமக்கு ஊட்டியில் இருப்பது போன்ற குளு குளு உணர்வை தருகிறது என்று ஐயம் தோன்றினால் மேற்கொண்டு படியுங்கள்.. உங்களுக்கு தான் இந்த பதிவு!

நிறைய வகையான ஏசிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன..
அவை ,
1​) ஜன்னல் ஏசி(Window Ac)

ac2
2) பிளவு ஏசி(Split Ac)

ac3
3) கோபுர ஏசி(Tower Ac)

ac5
4) கேசட் ஏசி(Cassette Ac)

ac4
5) கன சதுர ஏசி(Cube Ac)

ac6

இடத்திற்கு , இடத்தின் வசதிக்கு தகுந்தாற் போல் , ஏசியின் எந்த  வகை என்று தீர்மானம் செய்யப்பட்டு ,நிறுவப்படுகிறது! என்ன தான் வகை வகையாக ஏசிகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும் , அவற்றின் உள்ளே , ஒரே மாதிரியான வேலை தான் நடக்கிறது! அப்படி என்ன தான் வேலை அதனுள்ளே நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளும் முன்னே , ஏசியின் உள்ளிருக்கும் பாகங்களை , அக்கு வேர் , ஆணி வேறாக பிரித்து பார்த்து விடுவோம்..

ஏசியின் உள்ளிருக்கும் முக்கியமான பாகங்கள் நான்கு, அவை..
1) அமுக்கி(Compressor)
2) திரவமாக்கி(Condenser)
3) விரிவாக்கக் கட்டுப்பாட்டிதழ்(Expansion Valve)
4) ஆவியாக்கி(Evaporator)

ac1

இனி , ஏசியின் உள்ளே , அப்படி என்ன தான் நடக்கிறது என்று ஒரு எட்டு எட்டி பார்த்து விடுவோம்! ஏசியின் உள்ளே ஒரு அமுக்கி(Compressor) இருக்கிறது என்று பார்த்தோம் அல்லவா.. அந்த அமுக்கி , Freon போன்ற குளிர்பதன வாயுவை(Refrigerant) அமுக்குகிறது.. அவ்வாறு அமுக்கப்படும் போது , அந்த குளிர்ப்பதன வாயுவின் அழுத்தம்(Pressure) அதிகரித்து , மிக சூடாகி விடுகிறது! அவ்வாறு சூடான , குளிர்ப்பதன வாயு , பின்னர் , திரவமாக்கியின்(Condenser) உள்ளே செலுத்தப்படுகிறது .. அங்கே , ஒரு காற்றாடியின்(Fan) துணையோடு ,  சூடு  வெளியே விரட்டப்பட்டு , திரவ நிலைக்கு மாற்றம் பெறுகிறது . அவ்வாறு திரவ நிலைக்கு மாற்றப்பட்ட , குளிர்பதன வாயு , பின்னர் விரிவாக்க கட்டுப்பாட்டிதழுக்கு(Expansion Valve)  செலுத்தப்படுகிறது.. அந்த விரிவாக்க கட்டுப்பாட்டிதழோடு ஒரு வெப்பநிலை உணர்வி(Temperature Sensor) இணைக்கப்பட்டிருக்கும்! வெப்பக்  கட்டுப்பாடு  சாதனங்களின் அமைப்புகளை பொறுத்தே  , இந்த விரிவாக்க கட்டுப்பாட்டிதழ்  வேலை புரியும்.  அதாவது , நாம் ரிமோட்டை கொண்டு , 16 டிகிரி , 24 டிகிரி என்று நமக்கு தேவையான வெப்ப நிலையை அமைக்கிறோம் அல்லவா அது தான்!ஆக, அதற்கு தக்கவாறு , எவ்வளவு தேவையோ , அவ்வளவு  , திரவ நிலையில் இருக்கும் குளிர்பதன வாயுவை வெளியிடுகிறது , இந்த விரிவாக்க கட்டுப்பாட்டிதழ்!

அவ்வாறு விரிவாக்க கட்டுப்பாடிதழ் மூலமாக , திரவ  நிலையில் இருக்கும் குளிர்பதன வாயுவை , ஆவியாக்கியின்(Evaporator) உள்ளே செலுத்தும் போது , அவை திரவ நிலையில் இருந்து ஆவி நிலையை அடைந்து விடுகிறது. அவ்வாறு , விரிவடைதல் மூலமாக , திரவ நிலையில் இருக்கும் ,  குளிர் பதன வாயு , ஆவியாகும் போது , ஒரு குளிர்ச்சி உண்டாகிறது! ஏனெனில் , அவ்வாறு திரவ நிலையில் இருந்து ஆவி நிலை அடைவதற்கு தேவையான வெப்ப சக்தியை , தன் சுற்றுவட்டாரங்களில் இருந்து எடுத்து கொள்கிறது!இங்கே , சுற்றுபுறம் என்று குறிப்பிடப்படுவது , நம் அறை! நம் அறையில் இருக்கும் காற்றின் வெப்பத்தை எடுத்து கொண்டு ஆவியாகி விடுகின்றது,திரவ நிலையில் இருக்கும் குளிர் பதன வாயு! உதாரணத்துக்கு , நாம் நமது உள்ளங்கையில் , ஒரு துளி பெட்ரோலை , வைத்தால் , அத்துளி , நம் உள்ளங்கையின் வெப்பத்தை எடுத்து கொண்டு ஆவியாகி விடும்! அத்தருணத்தில் , ஒரு குளிர்ச்சியை , நம் உள்ளங்கையில் உணர முடியும்! அதை போலவே தான் இதுவும்! இந்த குளிர்ச்சி தான் , நம் அறையில் இருக்கும் காற்றுக்கு , காற்றாடி மூலமாக கொடுக்கப்படுகிறது! பின் , ஆவி நிலையில் இருக்கும் குளிர் பதன வாயு , மீண்டும் அமுக்கியின் உள்ளே செலுத்தப்படுகிறது. இது ஒரு சுழல் செயல்முறை(Cyclic Process) போல , திரும்ப , திரும்ப நடை பெற்று கொண்டே இருக்கும்! எப்பொழுது அமுக்கி வேலை செய்ய விடாமல் , நிறுத்தப்படுதோ, அப்பொழுது , இந்த செயல்முறை ஒரு முடிவுக்கு வரும் !

ஏசி என்று அழைக்கப்படும் காற்று பதனாக்கி , அறையில் இருக்கும் காற்றின் வெப்பத்தை வெளியேற்றி , அதே காற்றை தான் குளிர்விக்கின்றது! அறையின் உள்  இருக்கும் காற்றை எல்லாம் வெளியேற்றுவதில்லை!அதனால், அந்த அறையினுள்ளே , மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏற்றுவது என்பதெல்லாம் , கூடவே கூடாது! ஏனெனில் ,கதவு , ஜன்னல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்  ஏசி அறைகளில் ,  பிராணவாயு(Oxygen ) கம்மியாக இருக்கும்… ஆக, எரியும் மெழுகுவர்த்தியால் , முழுமையாக எரிய முடியாமல் ,கார்பன் மோனாக்சைட் என்ற நச்சு வாயு உருவாகி , அறையினுள் இருக்கும் ஆளை சில நிமிடங்களில் கொன்று விடும்! இந்த கார்பன் மோனாக்சைட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்!

candle

ஏற்கனவே , நாம் , ஏசியின் வகைகளையும் , ஏசியின் உள்ளிருக்கும் , நான்கு முக்கியமான பாகங்களை பார்த்தோம்! ஜன்னலில் மாட்டப்படும் ஏசியில் , ஒரே பெட்டியில் , எல்லா பாகங்களும் இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருப்பார்! ஆனால் , பிளவு ஏசியை , எடுத்து கொண்டால் , ஆவியாக்கி(Evaporator) அறையின் உள்ளேயும் , திரவமாக்கி(Condenser) , அறையின் வெளியேவும் இருக்கும் வண்ணம் வடிவமைத்திருப்பர்! இந்த இரண்டையும் குழாய்கள்(Pipes) மூலம் இணைத்திருப்பர்! இந்த குழாய்கள் வழியாக தான் , குளிர்பதன வாயு(Refrigerent) ,உள்ளேயும் , வெளியேயும் சுற்று சுற்றி வரும்!

DC-Comopressor-Fridge-DC-220-

நம் வீட்டு பிரிஜ்(Fridge) , அதாங்க குளிர்பதனப்பெட்டியை எடுத்து கொள்ளுங்கள் , அதுவும் ஏசியின் அதே செயல்முறையை கொண்டது தான்! உடனே , ஆஹா என்று , இரவு படுக்கும் போது , அதை திறந்து விட்டு , அதன் முன்னே படுத்து கொள்ளலாம் என்றெல்லாம் ஆசை படாதீர்கள்! அப்படி பிரிஜ் மூலமாக , குளிர் காற்று வாங்க நினைத்தால் , என்னவாகும் தெரியுமா?? அறையின் காற்று , குளிருவதற்கு பதிலாக ,அறை காற்றின் வெப்பம் அதிகரித்து விடும்! ஏனெனில் , அவ்வாறு பிரிஜ் கதவை , திறந்து வைக்கும் போது , பிரிஜ் இன் பின் பக்கம் வழியாக , வெளியேறும் வெப்ப காற்று , முன் பக்கம் வெளியாகும் குளிர்ந்த காற்றை சமன் செய்து விடும்! மேலும் பிரிஜ் இன் அமுக்கி(Compressor) , ஒரு சின்ன இடத்தை , குளிர்விப்பதற்கு ஏற்றவாறு மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும்! ஒரு பெரிய அறையை குளிர்விக்க அல்ல! மீறினால் , அறையின் வெப்பம் குறைவதற்கு பதிலாய் வெப்பம் அதிகரித்து காணப்படும்!

ஏசியை உபயோகம் செய்பவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில,
1) ஏசி ஒரு ஈரப்பதமகற்றி(Dehumidifier)! ஆதலால் , ஏசி அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் ,ஏசி அறையினுள் உறங்குபவர்கள் , அவ்வபொழுது தண்ணீர் அருந்த வேண்டும்! இல்லை என்றால் , உடம்பினுள் இருக்கும் , தண்ணீரை வற்றி போக செய்து விடும் இந்த ஏசி! பின் கட்டி சளியினால் அவதி , கழுதை , குதிரை என்று அனைத்தும் வண்டி கட்டி கொண்டு ஓடி வந்து , நம் உயிரை வாங்கும்!சளி பற்றி அறிய இங்கே சொடுக்கவும்!

how-a-dehumidifier-works-art

மேலே உள்ள படத்தில் , நம் அறையின் ஈரம் எவ்வாறு உறிஞ்சப்பட்டு , தண்ணீராய் வடிகிறது பாருங்கள்!
2) என்னதான் , ஏசி அறையினுள் உறங்குவது , வேலை செய்வது எல்லாம் சுகமாக இருந்தாலும் , அவ்வப்பொழுது ஏசியின் காற்று வடிகட்டியை(Air Filter),இரண்டு வாரங்களுக்கு , ஒரு முறையாவது , தண்ணீரை கொண்டு , சுத்தம் செய்வது சாலச் சிறந்தது! இதனால் , ஆஸ்துமா போன்ற வியாதிகள் வராமல் தடுத்து கொள்ளலாம்! மேலும் , தூசி அடைப்புகளை , கண்டு கொள்ளாமல் , விட்டு விடுவீர்களாயின் , அறையை குளிரூட்ட , அமுக்கி அதிகமாய் வேலை செய்து , மின்சார பில்லை எகிற வைத்து , நம் இதயத்தை பதம் பார்த்து விடும் ஜாக்கிரதை!

images (1) images (2)
3)​ஏசியின் உள்ளே இருக்கும் குளிர்பதன வாயு , நான்கு வருடங்கள் தொடர்ந்து உழைத்த பின்னே , படிப்படியாக தீர்ந்து விடும்! அதன் பின்னே , புதிதாக குளிர்பதன வாயுவை நிரப்ப வேண்டியது அவசியம்!

4) ஏசி அறைகளில் , எதையும் எரிக்க கூடாது! ஏனெனில் , ஒரு பொருள் ஏசி அறைகளில் , எரியும் போது , அது அந்த அறையில் இருக்கும் ஆக்சிஜனை விரைவில் காலி செய்து விடும்! நாலைந்து மனிதர்கள் , ஒரு பூட்டிய ஏசி அறையில் உறங்கும் போது கூட , அவ்வளவு விரைவாக , ஆக்சிஜன் காலி ஆவதில்லை! ஆனால் , நெடு நேரம் , நாலைந்து மனிதர்கள் , ஒரு பூட்டிய, சிறிய  ஏசி அறையில் ,  இருக்கும் போது , கண்டிப்பாக , அவர்களின் உடல் நலம் கெடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!

5) ஏசியை போட்டு விட்டு காருக்குள் தூங்குபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! அவ்வப்பொழுது , ஏசியின் ஆவியாக்கியையும் ,கார் இன்ஜினின் , வெளிப்படுத்துகுழாயையும்(Exhaust pipe) , எந்த கசிவும்(Leakage) இல்லாமல் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்! இல்லையேல் , முன்னே சொன்னது போல , ஏசியின் ஆவியாக்கி வழியாக , கார்பன் மோனாக்சைட் வெளிவந்து , சத்தம் இல்லாமல் , தூங்கும் ஆளை காலி செய்து விடும்!

co1

co

co3

இப்பொழுது எல்லாம் இன்வெர்டர் ஏசி மிக பிரபலம்! ஏசியின் உள்ளே இருக்கும் முக்கியமான பாகமான , அமுக்கியின் வேகத்தை, இந்த இன்வெர்டெர் கட்டுப்படுத்தும்!இன்வெர்டெர் என்றால் என்ன என்று அறியஇங்கே சொடுக்கவும்!

inv

இந்த வகை இன்வெர்டெர் ஏசி , பழைய வகை ஏசியை காட்டிலும் , மிக குறைந்த அளவே , மின்சாரத்தை உட்கொள்கிறது! இதன் உள்  இருக்கும், சிறப்பு பாகங்களால் ,  இதன் விலை என்னவோ அதிகம் தான் , ஆனால் , படிப்படியாக குறையும் , மின்சார பில் மூலமாக , சரி கட்டி விடலாம்!

கொசுறு தகவல்: வெப்ப நாடுகளில் , ஏசியை உபயோகம் செய்வது போல , குளிர் பிரதேசங்களில் , ஹீட்டர்  (Room Heater) உபயோகிப்பர்! இந்த ஹீட்டர் என்றால் என்ன என்று தனி பதிவு எல்லாம் போட வேண்டும் என்று அவசியம் இல்லை! ரொம்ப சுலபமாக இந்த ஹீட்டரை பற்றி சொல்ல வேண்டும் ஆனால் , ஏசியின் உல்டா தான் ஹீட்டர் !

images (3)

ஆம் , ஏசியின் செயல்முறையை , அப்படியே தலை கீழாக வேலை செய்ய வைத்தால் அது தாங்க அறையை சூடு படுத்தும் ஹீட்டர்!

நன்றி! வணக்கம்!

Posted in - இயற்பியல், அறிவியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 24 பின்னூட்டங்கள்

பருவமழை என்பது யாதெனின்

rain

மழையை  விரும்பாதவர் இவ்வுலகில் யாவரும் இலர்! கார் மேகத்தை கண்டு விட்டாலே , மயில் தன் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுமாம்! அது சரி , அது என்ன கார் மேகம்? கார் மேகம் என்றால் கருத்த மழை மேகம்! பொதுவாக , மேகம் , வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்! மழை காலங்களில் மட்டும் , இந்த மேகத்துக்கு யார் கருப்பு வண்ணம் அடித்து விடுகிறார்கள் என்ற ஐயம் மேலிடுகிறது அல்லவா! கார் வண்ண மேகத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்வோம்!

அதற்கு முன்னே ,மேகம் என்பது என்ன என்று முதலில் அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே  மேகம்!சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்.. சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல் , குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும்  தண்ணீர்  , மரங்கள் , செடிகள் , கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன !அவ்வாறு மேலெழும்பும் நீராவி , மேலே மேலே செல்ல செல்ல , குளிர்ந்து , சிறு சிறு தண்ணீர் துளிகள் ஆகி  விடுகிறது இல்லையேல் உறைந்து சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் ஆகி விடுகிறது . அவ்வாறு தண்ணீர் துளிகளாகவும் , பனிக்கட்டி படிகங்களாகவும் ,மாற்றம் அடைந்து விட்ட நீராவி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தூசி படலத்தில் , ஒட்டிக்  கொண்டு மேகங்களாக உருமாறி விடுகிறது!

மேகங்களுக்கு உண்மையில் நிறம் எதுவும் கிடையாது! ஆனால் , நம் கண்ணுக்கு அவை , வெள்ளை  நிறத்திலும் , சாம்பல் நிறத்திலும் காட்சி தருகின்றன. மேகங்கள் , தன்னுடைய வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும்! அது ஏனெனில் , மேலெழும் வெப்ப காற்று , மேகத்தை வந்தடையும் போது , அக்காற்றின் வெப்பம் தாங்கமாட்டாமல் , மேகங்கள் சற்றே ஆவியாகி விடுகின்றன! தோற்றம் , பரிமாணம் , வடிவம் மற்றும்  அமைப்பை பொறுத்து மேகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1) ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Stratus Clouds) , படுக்கை விரிப்பை போன்றது.

stratus_lg
2)கிமுளுஸ் மேகங்களை(Cumulus Clouds) , முகிற் கூட்டத் திரள் என்று அழகு தமிழில் சொல்வர். இவை , ஒன்றன் மேல் ஒன்றாக , அழகாக , குவிக்கப்பட்ட , திகைப்பு ஊட்டக்கூடிய வெள்ளை மேகங்கள்.இவ்வகை மேகங்கள் , சிறு சிறு தண்ணீர் துளிகளை தன்னுள்ளே கொண்டது!

cumulus
3)சிர்ருஸ் மேகங்களை(Cirrus clouds) உயர் வானத்து முகில் வகை என்று குறிப்பிடுவர். ஆம் , இவை , மிக உயரத்தில் காணப்படும் மேகங்கள். இவை சுருள் சுருளாய் , அழகான வெள்ளை நிறத்தில் காணப்படும். இவ்வகை மேகங்கள் , சிறு சிறு பனிக்கட்டி படிகங்களை தன்னுள்ளே கொண்டது!

cirrus_clouds_by_canyonlord
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகை மேகங்களிலும் , சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது பனிக்கட்டி படிகங்கள் தளர்வாக கட்டப்பட்டிருக்கும். அதனால் , இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ,சுலபமாக ஊடுருவி செல்ல முடியும்!
4)அல்டோ  ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Alto Stratus clouds) , அழகாக விரித்த , வெள்ளை மற்றும் சாம்பல் நிற படுக்கை விரிப்பு போல வானத்தில் காட்சி அளிக்கும். சில நேரங்களில் , இவ்வகை மேகம் , மிக அடர்த்தியாக இருக்கும் காரணத்தினால் , பிரகாசிக்கும் சூரியனை , வெள்ளி போல் தகதகக்கும் , சந்திரனை கூட மறைத்து விடும் .

altostratus_clouds_by_creepydark13-d6m0w1z

5) நிம்போ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Nimbo Stratus clouds), உயர் வானத்தில் காணப்படும் மேகம். இவை குறிப்பிட்ட வடிவில் இல்லாமல் , தன் வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும் இயல்புடையது. அவை , அடர்ந்த சாம்பல் நிறத்தில் , ஒரே விதமாக காணப்படும்.

nimbostratus
6)கிமுளோ நிம்பஸ் மேகங்கள்(Cumulo Nimbus clouds) தான் உண்மையான மழை மேகங்கள்! இவற்றை கார் மேகம் என்று சொல்லலாம். நல்ல கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ஊடுருவி செல்ல இயலாது! ஏனெனில், சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் , மேகத்தின் உள்ளே மிக அடர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்!

cumulonimbus
ஆனால் , இந்த கார் மேகம் , நம் கண்ணுக்கு புலப்படுவது போல் , நிஜமாகவே கருப்பு  வண்ணத்தில் இருக்காது . இந்த கார்மேகத்தின் மேல் , வானூர்தியில் சென்று பார்த்தால் , உண்மை விளங்கும்! வானூர்தியில் அமர்ந்து பார்க்கும் பொழுது , இவ்வகை கார் மேகங்கள் , பளிச் என்ற வெண்மை நிறத்தில் காட்சி அளித்து , காண்போரை திகைப்பூட்டும்! இவ்வகை மேகத்தின் மேலே , வெளிச்சம் பட்டு தெறிப்பதனால் ,வானூர்தியில் அமர்ந்து பார்ப்பவருக்கு வெள்ளை நிறத்திலும் , பூமியில் நின்று பார்ப்பவருக்கு ,மழை மேகமாய் ,கருத்த நிறத்திலும் ஒரே நேரத்தில் காட்சி அளிக்கிறது !

வகை வகையாய் மேகங்களை பார்த்தாயிற்று!இனி நமக்கு ஜூன் மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை கொண்டு வரும் தென்மேற்கு பருவ காற்றை பற்றி ஆராய்ந்து அறிவோம்! இந்த தென் மேற்கு பருவ காற்று எங்கிருந்து மழையை கொண்டு வருகிறது?? அந்த சிதம்பர ரகசியத்தை இன்று எப்படியாவது போட்டு உடைத்து விடுவோம்! அது என்னவெனில் , சூரியனின் வெப்பத்தால் , நிலம் ஆனது ஓரளவு  வெப்பமாகிறது . ஆனால் , நிலத்தின் மேல் உள்ள காற்று சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் கிடுகிடுவென வெப்பமடைந்து விடுகிறது!
அதே நேரம் , கடல் மிக நிதானமாக வெப்பமடைகிறது! சூரிய கதிர்கள் , கிட்டத்தட்ட 200 மீட்டர் ஆழம் வரை , ஊடுருவி உள்நுழைகின்றன! ஆதலால் , கடலின் மேல் உள்ள காற்று குளிர்ந்த காற்றாகவே இருக்கிறது! நிலத்தின் மேல் உள்ள காற்று , கடலின் மேல் உள்ள காற்று , இரண்டுக்கும் இடையே இருக்கும் வெப்ப வித்தியாசம் கிட்டத்தட்ட 5-10 டிகிரி இருக்குமாம்!

இந்த வெப்ப  சலனத்தால்  ,சூடான நிலக்காற்று மேலெழும்புகிறது. அவ்வாறு மேலே எழும்பிய சூடான காற்று இருந்த இடத்தை நிரப்ப , குளிர்ந்த கடல் காற்று வேறு வழியின்றி நிலத்தை நோக்கி நுழைகிறது. இது போன்ற நிகழ்வுகளே , பருவ காற்று வீச ஆரம்பிப்பதற்கு உந்து சக்தியாக திகழ்கின்றன!

வெயில் காலத்தில் , ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் தார் பாலைவனம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளும் , கடுமையாக வெப்பமடைகிறது .இதனால் இந்த நிலங்களின் மேல் இருக்கும் காற்று சூடாகி மேல் எழும்புகிறது! இந்த நிலங்களின் மேல் , காற்று சூடாகி மேல் எழுவதால் ஒரு வெற்றிடம் உண்டாகிறது.. அந்த வெற்றிடத்தை நிறைவு செய்ய , குளிர்ந்த ஈரக் காற்று , இந்தியப் பெருங்கடலில் இருந்து, தென் மேற்கு திசையில் கிளம்புகிறது! அவ்வாறு கிளம்பிய ஈரக்காற்று இமாலய மலையை  நோக்கி  இழுக்கப்படுகிறது. இமாலய மலை, ஒரு தடுப்பு சுவர் போல் செயல்படுகிறது!

images (1)

இந்த தென் மேற்கு பருவ மழை , ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பித்து செப்டெம்பர் மாத கடைசி வரை பெய்யென பெய்யும் ஒரு மழை! இந்திய பெருங்கடலில் இருந்து ,தென் மேற்கு திசையில் இருந்து வீசும் ஈரக்காற்றால், உண்டாகும் தென் மேற்கு பருவ மழை , தென் இந்தியாவில் நுழைந்ததும் , அதன் அமைப்பு காரணமாக , இரண்டு கிளைகளாக பிரிந்து கொள்கிறது. அவை ,
1) அரபி கடல் கிளை
2)வங்காள விரிகுடா கிளை

இந்த, தென் மேற்கு பருவ காற்று (அரபி கடல் கிளை ), முதலில் , மேற்கு தொடர்ச்சி மலைகளை சென்று ஒரு அடி அடிக்கறது.. ஆக, கேரள மாநிலம் தான் , தென் மேற்கு பருவ மழையை முதலில் பெறுகிறது! பின்னர் , அவை , மேற்கு தொடர்ச்சி மலைகள் நெடுகிலும்(கடலோர பகுதிகளில்) , மழையை பொழிந்து , பின் அம்மலைத்தொடர்ச்சியின் வடக்கே நகர்ந்து செல்கிறது!

அடுத்து தென் மேற்கு பருவ காற்று (வங்காள விரிகுடா கிளை) பற்றி பார்க்கலாம்! இந்த காற்று வங்காள விரிகுடா மேலாக அடித்து , வட கிழக்கு இந்தியா மற்றும் வங்காளம் வழியாக சென்று கிழக்கு இமாலய மலையை சென்றடைகிறது ! செல்லும் வழியே , வங்காள விரிகுடாவில் , சொட்ட சொட்ட ஈரத்தை அள்ளிக் கொண்டு செல்கிறது இந்த தென் மேற்கு பருவ காற்று! அங்கே , கொட்டோ கொட்டென்று , மழையை கொட்டி தீர்த்து விட்டு , இந்த தென் மேற்கு பருவ காற்று , மேற்கு நோக்கி திரும்புகிறது! அங்கே , சிந்து நதிக்கும் , கங்கை நதிக்கும் இடையே இருக்கும் சமவெளி பகுதியை , வழி நெடுகிலும் ஆனந்தமாய் சொட்ட சொட்ட நனைத்து செல்கிறது!

இந்த தென் மேற்கு பருவ காற்று , கடலில் இருந்து நிலத்துக்கு வீசுபவை! அடுத்ததாக , நிலத்தில் இருந்து கடலுக்கு வீசும் வட கிழக்கு பருவகாற்று ஒன்று உண்டு! அதை உலர்ந்த ,அதிக  ஈரமில்லாத பருவ காற்று என்று அழைப்பர்!இது இமாலயத்தில் இருந்து , சிந்து நதி மற்றும் கங்கை நதிக்கு இடையே  இருக்கும் சமவெளியை கடந்து , இந்திய பெருங்கடல் நோக்கி வட கிழக்கு திசையில் அடிப்பவை..

download

என்ன தான் தென் மேற்கு பருவ காற்று,ஆண்டின் ஒரு கால கட்டத்திலேயும் , வடகிழக்கு பருவகாற்று ஆண்டின் மற்றொரு கால கட்டத்தில் , எதிரெதிர் திசையில் வீசினாலும், பருவ மழை, வழி நெடுகிலும் பெய்ய வேண்டுமெனில், சில விஷயங்கள் கை கொடுக்க வேண்டும். அதாவது , பருவ காற்று வீசும் பாதையில் ஏதேனும் உயர்ந்த சிகரங்கள் இருக்க வேண்டும். மேலும் , அந்த தேசத்தை சுற்றிலும் நீர் நிலைகள் நிறைந்து இருக்க வேண்டும். அதாவது , நம் இந்திய தேசத்தை , வங்காள விரிகுடா , அரபி கடல் , இந்திய பெருங்கடல் ஆகியவை மூன்று பக்கத்திலும் சூழ்ந்து இருப்பது போல..அவ்வாறு , பருவ காற்று வீசும் வழியில் , உயர்ந்த மலைகள் எதுவும் இல்லையெனில், பருவ காற்று வீசும் , ஆனால் மழை எதுவும் பெய்யாது!

தென் மேற்கு பருவ காற்றுக்கு கை கொடுப்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களும் , இமாலய மலையும் தான் ! அதே போல வட கிழக்கு பருவ மழைக்கு கை கொடுப்பது , உயர்ந்த கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களே ஆகும்!இத்தகைய மலைத் தொடர்கள் இல்லையெனில் , இந்திய பெருங்கடலில் இருந்து , தென் மேற்கு திசையில் வீச தொடங்கும் ,தென் மேற்கு பருவ காற்று , எந்த தடுப்பு சுவரும் இல்லை என்பதால் , மழை எதுவும் பொழியாமல் நேரே திபெத் , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் என்று சுற்றுலா சென்று விடும் !

images (2)

கடைசியாக , முதல் மழையை அறிவிக்கும் , மண் வாசனையை பற்றி குறிப்பிடாமல் இருக்கு முடியவில்லை.. மண் வாசனை எப்படி கிளம்புகிறது ?? இதை கிளப்புவது , மண்ணில் வாழும் ஒரு வகையான பாக்டீரியா! முதல் மழை பெய்த உடன் , இந்த பாக்டீரியா , எளிதில் ஆவியாகும் ஒரு இரசாயன கலவையை வெளியிடுகிறது .. ஒரு கைப்பிடி மண்ணில் , பத்து லட்சம் பாக்டீரியாக்கள் இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்! இந்த பரவசமூட்டும் மண் வாசனையோடு இந்த பதிவை முடித்து கொள்கிறேன்…
நன்றி…. வணக்கம்!

Posted in அறிவியல், புவியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

ஓட்ஸ்…. நிஜமாகவே நல்லது தானா??

oats7

ஓட்ஸ் என்ற பெயருடைய தானியம் இன்றைய கால கட்டத்தில் ரொம்பவே பிரபலம். அரிசி கோதுமைக்கு அடுத்தபடியாக , ஓட்ஸுக்கும் , நம் வீட்டு சமையல் அறைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு.  ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம்.. மேலும் நெடு நேரம் வரை பசி தாக்கு பிடிக்கவல்லது.. சர்க்கரை நோயால் வருந்துபவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த ஓட்ஸ்…   ஓட்ஸ் நம் இருதயத்துக்கு மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கவல்லது.சிறிது காலம் முன்பு வரை மேகி நூடுல்ஸ் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே… அதன் வழியிலே , உடனடி ஓட்ஸ் இப்பொழுது ரொம்பவே பிரபலம். இவ்வளவு தூரம் மக்கள் மனதில் ஒரு பிரதான இடம் பெற்றிருக்கும் ஓட்ஸ்  தானியம் நிஜமாகவே நல்லது தானா??

oats5

காலை நேரத்தில் ஓட்ஸ்  கஞ்சியை உணவாக எடுத்து கொள்பவர்கள் , நாள் முழுக்க சக்தியோடு விளங்குவார்கள்! ஏனெனில், அது கொஞ்சம் கொஞ்சமாக  நாள் முழுக்க , உடம்புக்கு சக்தியை வெளியிடும் வல்லமை மிக்கது! ஒட்ஸில் வைட்டமின்கள் , மினரல்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதனால் , ஓட்ஸினால் செய்யப்படும் கஞ்சி மிகுந்த சத்தான  உணவாகவே  மதிப்பிடப்படுகிறது! ஆனால், யாருக்கும் அவ்வளவாக தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஓட்ஸ்   பைட்டிக் அமிலம் (Phytic Acid) நிறைந்தது. இந்த  பைட்டிக் அமிலத்தை  , நம் இரைப்பையால்  ஜீரணிக்க இயலாது! இந்த பைட்டிக் அமிலம் நம் இரைப்பையில் ,சும்மா இருக்காமல் , இரும்பு , கால்சியம்  , சின்க் , மெக்னீசியம்  போன்றவற்றை தன்னோடு சேர்த்து கொண்டு , நம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் எதையும் உறிஞ்ச விடாது செய்து விடும்.

இந்த பைட்டிக் அமிலத்தை   மட்டும் நீக்கி விட்டால் , ஓட்ஸ் கஞ்சி  நிஜமாகவே சத்தான உணவு தான்! அது எப்படி என்று அடுத்து பார்க்கலாம். ஓட்ஸ் கஞ்சி  காலையில் செய்ய போகிறீர்கள் என்றால் , முதல் நாள் இரவே , ஓட்ஸை தண்ணீரில் ஊற போட்டு விட வேண்டும். அதிலே கொஞ்சம் தயிர் அல்லது மோரை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் , பாப்பரை மாவு  (Buck Wheat Powder )

பாப்பரை

பாப்பரை

பாப்பரை  பொடி

பாப்பரை பொடி

அல்லது முழு கோதுமை மாவு கொஞ்சம் இதிலே ஊற போட வேண்டும். இந்த பாப்பரை யில் பைடேட் நொதி (Phytate Enzyme)அதிகமாக இருப்பதனால், அது ஓட்ஸில் உள்ள பைட்டிக் அமிலத்தை உடைத்து , ஒன்றும் இல்லாது  செய்து விடும்!மறு நாள் காலையில் , மேலே குறிப்பிடப்பட்ட வேதியல் நிகழ்வுகளால் , ஊற போட்ட ஓட்ஸ் , கஞ்சி கிண்டப்படும் போது , அதி விரைவாக வேகவும் செய்யும் , அதே நேரத்தில் , நம் இரைப்பையில் எளிதில் முழுமையாக ஜீரணிக்கப்படும் உணவாக மாறி இருக்கும்! ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கப் பெறும்  என்பதில் எந்த ஐயமும் இல்லை !

imagesQPCRAD0M

சர்க்கரை நோயால் அவதி படுபவர்களுக்கு ஓட்ஸ் கஞ்சி , சிறந்த உணவு என ஏற்கனவே அறிந்தோம்.. இனி சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த வகை ஓட்ஸ் நல்லது என்று கண்டு அறிவோம்! முன்னெல்லாம் , மாவு சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளையே சாப்பிட கூடாது என்று சர்க்கரை நோயாளிகள் அறிவுறுத்தப்பட்டனர்! ஆனால் , இன்றைய கதையோ வேறு! ஓரளவு , மாவு சத்து நிறைந்த ஆகாரங்களை  எடுத்து கொண்டால் தப்பில்லை என்ற நிலையில் இருக்கிறது ! சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index )  என்று ஒன்று இருக்கிறது! அதில் , எந்தெந்த உணவு உட்கொண்டால் , எவ்வளவு வேகமாக , இரத்தத்தில் , சர்க்கரையின் அளவு உயரும் என்ற விவரங்கள் நிறைந்து இருக்கும். அதிலே , ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள், குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு(Low Glycemic Index ) கொண்டது. இருந்தும் , எல்லா வகையான ஓட்ஸும் நல்லது தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் அளிப்பேன் !எந்த  வகையான ஓட்ஸ்  நல்லது என்று அடுத்து பார்க்கலாம் !

untitled

ஓட்ஸில் நிறைய வகைகள் இருக்கின்றன…
அவற்றில் சில,
1)எஃகு வெட்டு ஓட்ஸ்(Steel  cut  Oats )
2)உருண்ட ஓட்ஸ் (Rolled  Oats )
3)உடனடி ஓட்ஸ் (Instant oats )
இதில் எந்த வகை தேர்ந்து எடுக்கிறோம் என்பதை பொறுத்து , சர்க்கரை உயர்த்தல் குறியீடு 42 முதல் 66 வரை வேறுபடும்!

oats4     oats6

எந்த ஓட்ஸ் நம் உடலுக்கு நல்லது என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்னே , எந்த வகை , இயற்கையோடு இயற்கையாய் ஒத்து இருக்கிறது என்பதை கண்டு கொள்ள வேண்டியது முக்கியம். பதப்படுத்தப்பட்ட உடனடி ஓட்ஸை காட்டிலும் , உருண்ட  ஓட்ஸ் நல்லது! உருண்ட ஓட்ஸை காட்டிலும் எஃகு வெட்டு ஓட்ஸ் மிகவும் நல்லது! ஆக, இப்பொழுது எந்த வகையான ஓட்ஸ் நல்லது என்பது தெளிவாக விளங்கி இருக்கும்!

ஓட்ஸை  தேர்ந்தெடுக்கும் போது எஃகு வெட்டு ஓட்ஸையே தேர்ந்தெடுங்கள்! ஏனெனில் , இதற்கு , சர்க்கரை உயர்த்தல் குறியீடு , மிக மிக கம்மி! இது மிகுந்த நார்ச்சத்து உடையது! உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது! உடனடி ஓட்ஸுகளுக்கு இன்றே கையசைத்து விடை கொடுத்து விடுங்கள்.

oats2                          oats1

அதிலே ருசிக்காக சேர்க்கப்படும் , உப்பு அல்லது சர்க்கரையால், உங்கள் உடம்புக்கு மேலும் , மேலும் துன்பமே தவிர இன்பம் கிடையாது!  ஓட்ஸ் பதப்படுத்தப்பட்டு , செயற்கையாக , நறுமணச்சுவை  சேர்க்கப்படும் போது, அதிலே இருக்க வேண்டிய  நார்ச்சத்தும் , வேறு நல்ல சத்துகளும், இல்லாது போக கூடும் என்பது தான் , நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை ! எஃகு வெட்டு ஓட்ஸும் , உருண்ட ஓட்ஸும்  ஓரளவு , இயற்கையோடு ஒத்து இருப்பதால் , எந்த பயமும் இன்றி உட்கொள்ளலாம். என்ன ஒன்று , உடனடி ஓட்ஸ் , நிமிடங்களில் தயாரித்து விடலாம்! மற்ற வகைகள் , 15 இல் இருந்து 30 நிமிடங்களில் தயாரித்து விடலாம்! திரும்பவும் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்! நீங்கள் உணவு தயாரிக்க தேர்ந்தெடுத்த ஓட்ஸை , முந்தைய நாள் இரவே , சிறிதளவு தயிர் , மற்றும் பாப்பரை பொடியுடன் ஊறப் போட்டு விட மறக்காதீர்கள்! அடுத்த நாள் , ஊறிய ஓட்ஸை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு , உண்ணப்படும்  போது ,நம் உடம்புக்கு தேவையான , முக்கியமான சத்துக்களான , இரும்பு சத்து , கால்சிய சத்து ஆகியவை உணவிலிருந்து முழுமையாக , நம் உடம்புக்கு உறிஞ்சப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

Posted in அறிவியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

டை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்

hairdye

இன்றைய கால கட்டத்தில் டை அடிப்பது அதாவது கூந்தலுக்கு சாயம் பூசி கொள்வது என்பது ஃபேஷன் ஆகி விட்டது. நரை தோன்றியவர்கள் மட்டும் டை அடித்தது அந்த காலம்.. இன்று இளைஞர்கள், இளைஞிகள் என்று ஒருவர் விடாது சகலரும் தங்கள் கூந்தலின் நிறத்தை , தங்களுக்கு பிடித்த வண்ணம் மாற்றி கொள்ள முனைகிறார்கள் . இவ்வாறு தங்கள் கூந்தலின் நிறத்தை மாற்றி கொள்ளும் போது , தங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதை அவர்கள் உணர்கிறார்கள்! கூந்தல் சாயம் அடிப்பது ஒரு புறம் இருக்க , கூந்தல் சாயம் அடிப்பது நல்லதா ?? இதனால் உடல் நல பாதிப்பு எதுவும் உண்டாகுமா?? சாயம் அடிக்க சரியான முறைகள் யாது  ??போன்றவற்றை ஒரு நிமிடமாவது யோசித்து பார்த்ததுண்டா! இல்லையெனில் , மேலே  படிங்க .. உங்களுக்கு தான் இந்த பதிவு!

download

கூந்தலுக்கு சாயம் நல்லதா கெட்டதா என்று ஆராய்ந்து அறிவதற்கு முன்னே ,  கூந்தலை பற்றி சில விடயங்கள் அறிந்து கொள்வோம். கூந்தல் ஆனது , கெராட்டின் என்னும் புரதத்தால் ஆனது. இதே புரதம் தான் நம் நகத்திலேயும் , நம் சருமத்திலேயும் இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.  இயற்கையாய் அமைந்த நம் கூந்தலின் நிறம் , யூ மெலனின் , பியோ மெலனின் என இரு மெலனின் நிறமிகளின் இருப்பு விகிதத்தை பொறுத்து மாறுபடும். யூ மெலனின் கூந்தலுக்கு அடர்ந்த நிறங்களான கருப்பு , பிரவுன் நிறங்களை கொடுக்க , பியோ மெலனின் கூந்தலுக்கு வெளிர்  நிறங்களை  கொடுக்கிறது. இந்த இரு மெலனின் நிறமிகளின் இருப்பு விகிதம் , ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.. அதாவது அது அவரவர் மரபணு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்! ! மனிதனுக்கு வயது ஆக  ஆக , இந்த மெலனின் நிறமிகளை கூந்தல் படிப்படியாக இழந்து விடுகிறது. ஆகையால் தான் , வயதானவர்களுக்கு நரை தோன்றி விடுகிறது!

images (1)     images (2)

இனி தலை முடிக்கு நிரந்தரமாக  சாயம் எவ்வாறு ஏற்றப்படுகிறது என்று  பார்க்கலாம். நம் தலை முடிக்கு நிரந்தரமாக சாயம் ஏற்றுவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. நமது தலை முடியை மூன்று பாகங்களாக பிரித்து கொள்ளலாம். அவை , புறத்தோல்(Cuticle ), புறணி பகுதி (Cortex ),மைய பகுதி (Medulla ). இதில் புறத்தோல் பகுதி(Cuticle) , தலை முடியின் , பாதுகாப்பு கவசம் போன்றது! இந்த பகுதியை துளைக்காமல் , தலை முடியில் நிரந்தரமாக சாயம் ஏற்றுவது என்பது நடக்கவே நடக்காத காரியம் ! அடுத்தது புறணி பகுதி.. இந்த பகுதியில் தான் , முடிக்கு இயற்கையான நிறத்தை அருளும் , மெலனின் நிறமிகள் அமைந்து இருக்கின்றன.மேலும் , தலை முடி உலர்ந்து விடாமல் , ஈரத் தன்மையோடு விளங்க வழி செய்வதும்  இந்த புறணி பகுதி(Cortex) தான்!

images

தலை முடிக்கு நிரந்தரமாக சாயம் ஏற்றுவதற்கு , முடியின் பாதுகாவலன் ஆன புறத்தோல் பகுதியை சற்றே தளர்த்தி விட வேண்டும். இதை செயல்படுத்துவதற்கு , கூந்தல் சாயங்களில் அம்மோனியா(Ammonia) சேர்க்கப்படுகிறது! இப்பொழுது புறத்தோல் பகுதியை தளர்த்தியாயிற்று, இனி கூந்தலின் இயற்கையான நிறத்தை மாற்றுவதற்கான வேலைகளை பார்க்கலாம்! அந்த வேலையை திறம்பட செய்வதற்கு முன்னே ,உங்கள் கூந்தலின் இயற்கையான நிறத்தை கூண்டோடு ஒழித்து விட வேண்டும் ! அந்த வேலையை திறம்பட செய்ய திருவாளர் பெராக்ஷைட்(Peroxide) களம் இறக்கப் படுகிறார். அவர் , நம் கூந்தலுக்கு , இயற்கையான நிறத்தை அளிக்கும் , மெலனின் நிறமிகளை போட்டு தள்ளுகிறார்! அதன் பின்னே , நீங்கள் ஆசைப்பட்ட செயற்கை நிறத்தில்  கூந்தலுக்கு சாயம் இடப்படுகிறது! நன்கு சாயம் காய்ந்த பின்னே , தண்ணீரை கொண்டு கூந்தல்  கழுவ படுகிறது! அவ்வாறு கழுவி முடிந்த பின்னே , புறத்தோல் தன்  இயல்பு நிலைக்கு கொண்டு வரப் விடுகிறது! என்னதான் புறத்தோல்(Cuticle) இயல்பு நிலைக்கு கொண்டு  வரப்பட்டிருந்தாலும் , கூந்தலுக்கு  சேதம் ஆனது ஆனது தான்! அதன் இழப்பை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது!எப்படி வாழை பழத்தை தோல் உரித்த பின்னே , உரித்த தோல் கொண்டு மூடி , அதை பாதுகாக்க முடியாதோ , அதே போல் , புறத்தோலை தளர்த்தி , தலை முடிக்கு சாயம் ஏற்றிய பின்னே , அதை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாலும், அதனுள் இருக்கும் புறணி பகுதி(Cortex) , பரிபூரண பாதுகாப்போடு விளங்குகிறதா என்பது சந்தேகம் தான்!

hair-dye-presentation-16-638                Normal and Damaged hair

தலைக்கு சாயம் அடிப்பதனால் நச்சு பொருட்கள் நம் உடம்பினுள்ளே புகுந்து கொள்ளும் வாய்ப்பு சற்று அதிகம் தான்! நச்சு பொருட்கள் நம் உடம்பினுள்ளே , மூன்று வழிகளில் உள்நுழைகிறது. அவை, உண்ணுவது மூலம் , நுகர்வது மூலம்  மற்றும் தோல் உறிஞ்சுதல் மூலமாக! தலைமுடிக்கு  சாயம் அடிக்கும் போது ,தலையின் மேற்பகுதி வழியாக ,நச்சு பொருட்கள் , உடம்பினுள் நுழைந்து , இரத்தத்தில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்! உடம்பினுள் நுழையும் நச்சு பொருட்களை , நச்சு நீக்கம் செய்வது , கல்லீரலின் முக்கியமான வேலைகளில் ஒன்று!இரத்தத்தில் அதிகப்படியான நச்சு பொருட்கள் சேர்ந்து விடும் போது , கல்லீரல் சரியாக தன்  வேலையை செய்து முடிக்க முடியாமல் , சற்றே திணறி தான் போய் விடுகிறது!  கூந்தலை பாதுகாக்க , சந்தையில் விற்கப்படும் , செயற்கை பொருட்களில் எல்லாம் , நச்சு பொருட்கள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது! அவற்றுள் , தலைமுடிக்கு அடிக்கப்படும்  சாயம்,அதிகளவு நச்சு பொருட்களை , தன்னுள்ளே கொண்டு முதலிடத்தை பிடிக்கிறது! நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் , தலைக்கு சாயம் அடிப்பவர்களாக இருந்தால் , அவர்களுடைய கல்லீரல் , மேலும் , மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே கசப்பான உண்மை !

4exposureroutes video-undefined-1C92971B00000578-349_636x358

கூந்தல் சாயத்தில் , அதிக அளவில் நச்சு பொருட்கள் இருக்கிறது என்று அறிந்தோம்! அவற்றுள் முக்கியமான மூன்று நச்சு பொருட்களை இப்பொழுது பார்க்கலாம்..
1)PPD ( p-Phenylenediamine) – இந்த வேதியல் பொருள் , தலை முடிக்கு , செயற்கை நிறத்தை கொடுக்க வல்லது. சுருங்க கூறின் , இது ஒரு சாயம். இந்த சாயம் உபயோகம் செய்த குறுகிய காலத்துக்குள்ளேயே , ஒவ்வாமை , கண் எரிச்சல் , ஆஸ்துமா ,இரைப்பை அழற்சி ,சிறுநீரகச் செயலிழப்பு , தலை சுற்றல் , வலிப்பு , கோமா போன்றவை ஏற்படும்! அதிக காலம் உபயோகம் செய்யும் போது , கல்லீரல் பாதிப்பு , சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது உறுதி !

swellings

2)அனிலின் சாயம்- இந்த வேதியல் பொருள் , கண் , தோல் , மூக்கில் எரிச்சல் உண்டாக்குபவை.. அதிகப்படியான உபயோகம் செய்யப்படும் போது, கண் குருடாகும் வாய்ப்புகள் அதிகம்.

09_oa_a_prospective_clinical_study_01

3)4-ABP – இந்த வேதியல் பொருள் , புற்று நோய் உண்டாக்க கூடிய ஒரு காரணி.
இந்த மூன்று தவிர , கணக்கில் அடங்காத பல நச்சு பொருட்கள் , தலை முடிக்கு அடிக்கப்படும் சாயங்களில் நிறைந்து இருக்கின்றன!

கூந்தல் சாயத்தில் சேர்க்கப்படும் முக்கியமான  மூன்று சாயங்களை கண்டு அறிந்தோம்.இனி உடலுக்கு அதிகளவு சேதம் இல்லாது , தலை முடிக்கு சாயம் இடுவது எவ்வாறு என்று கண்டு அறியலாம்!

1)எப்போதாவது ஒரு முறை , மிக முக்கியமான விசேஷங்களின் போது மட்டும் தலைமுடிக்கு சாயம் ஏற்றி கொள்ளலாம்..இதனால் , அதனுள் இருக்கும் , நச்சு பொருட்களின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்ளலாம்.

2)தலை முடிக்கு சாயம் ஏற்றும் முயற்சியில் , தலையின் மேற்பகுதியை தவிர்த்து சாயம் போடுவது நலம்! இல்லையேல் , சாயம் , தோலால் உறிஞ்சப்பட்டு , நம் உடம்பில் ஓடும் குருதியொடு , நச்சு பொருட்கள்  கலந்து விடும்.

3)தலை முடிக்கு சாயம் ஏற்றும் போது , கைகளை பாதுகாப்பதற்கு ,  நல்ல ஒரு கையுறை(Glouse) மாட்டி கொள்வது , மிகவும் அவசியம்!

Hair-Dye-Risky-360x240

4)தலை முடிக்கு நிரந்தரமில்லாத சாயம் போடுவது  ஓரளவு நன்மை பயக்கும்! நிரந்தரமில்லா சாயம் போடும் போது , புறத்தோல் தளர்த்தப்படுவதில்லை! சாயம் ஆனது புறத்தோலின் மேலேயே அடிக்கப்படும்.. மூன்று , நான்கு தடவை , ஷாம்பூ போட்டு நன்கு தலையை அலசி விடும் போது , சாயம் கரைந்து ஓடி விடும்.. திரும்ப புதிதாக , கூந்தலுக்கு சாயம் இட்டு கொள்ள வேண்டியது தான்!

how permanent hair colors work     How semi permanent hair colors dye work

செயற்கை கூந்தல் சாயங்களில் நச்சு பொருட்கள் அதிகம் என்று பார்த்தோம்.. இனி இயற்கையில் கிடைக்க பெரும் கூந்தல் சாயங்களை ஒரு நோட்டம் விட்டு விடுவோம்…

1)மருதாணி
இதை அறியாதவர்கள் யாரும் இல்லை! இதை தண்ணீர் விட்டு மையாய் அரைத்து , கூந்தலில் சாயம் இட்டு கொள்ளலாம் .. இல்லையேல் , தேநீர் போன்று , தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க விட்டு , பின் சக்கையை வடிகட்டி , சாய நீரை , கூந்தலுக்கு நிறம் கொடுக்க பயன் படுத்தி கொள்ளலாம்! அவ்வாறு சாயம் இட்ட கூந்தலை , வெயிலில் ஒரு அரை மணி போல உலர்த்தும் போது ,அழகான நிறம் பெறுவது மட்டுமல்லாமல் , கூந்தலுக்கு ஒரு இயற்கை பளபளப்பும் கிடைக்கும்! பக்க விளைவுகள் எதுவும் கிடையாது!

henna-paste-with-sugar
2) காய்ந்த செம்பருத்தி பூக்களை , பவுடர் ஆக்கி , தண்ணீர் விட்டு மையாய் குழைத்தும் , கூந்தலுக்கு சாயம் இடலாம் !பறித்து காய வைத்த செம்பருத்தி பூக்களை போட்டு தேநீர் தயாரித்தும் , இயற்கையான கூந்தல் சாயம் பெறலாம்.. அவ்வாறு தயாரிக்க படும் , சாய தேநீரை , கூந்தலுக்கு இடுவதற்கு முன்னே , நன்கு ஆறி , குளுமையாக இருக்க வேண்டியது , மிகவும் அவசியம் !

hqdefault
3) தண்ணீர் சேர்த்து அரைக்கப்பட்ட பீட்ரூட் , கூந்தலுக்கு அழகான நிறத்தை கொடுக்கவல்லது!

Beet Juice Temporary Hair Dye DIY

இது போன்ற இயற்கையில் கிடைக்கும் பொருளை கொண்டு, கூந்தலுக்கு சாயம் ஏற்றும் போது , நிரந்தரமில்லா சாயம் மட்டுமே கிடைக்க பெரும் .. மாதத்திற்கு ஒரு முறையோ , இரு முறையோ , கூந்தலுக்கு திரும்பவும் சாயம் இட்டு கொள்ள வேண்டியது தான் ! ஆனால் , கூந்தல் பாதுகாப்பாக இருக்க போவது உறுதி ! மேலும் , கூந்தல் , எண்ணெய் பசை இல்லாது , உலர்ந்து , உடைந்து , ஒன்றும் இல்லாது போய் விடுமோ என்ற அச்சம் இல்லாது நிம்மதியாய் இருக்கலாம் !

Posted in அறிவியல், வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

மின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்

transistor4

மேலே படத்தில் மூன்று கால் பூச்சியை போல் காட்சி அளிக்கிறதே.. அது தாங்க நம்ம ஹீரோ டிரான்சிஸ்டர்! இது என்ன?? இது எப்படி உருவாக்கப்படுகிறது?? இது எப்படி வேலை செய்யும்?? இதற்கும் மின்னணுவியலுக்கும் என்ன சம்பந்தம்  என்று விரிவாக , ஒவ்வொன்றாக நோக்குவோம்!

நமது மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள் இருக்கின்றன! அவை தான் நாம் யோசனை  செய்வதற்கு ,நடந்த ஒரு விஷயத்தை  நியாபகப்படுத்தி  பார்ப்பதற்கும் , துணை புரிகின்றது. அதே போல, இந்த டிரான்சிஸ்டர்கள்  கணினியின் மூளை உயிரணுக்கள்!  இந்த டிரான்சிஸ்டர்கள் , மண்ணில் பரவலாக காணப்படும்  சிலிகான்(Silicon) என்ற வேதியியல் தனிமத்தை கொண்டு உருவாக்கப்படுகிறது!

transistor5

படத்தில் காணப்படுவது , ஒரு எளிமையான மின்னணு சுற்று(Simple Electronic circuit) பலகையில் காணப்படும் ஒரு தனி டிரான்சிஸ்டர் . கணினியின் உள்ளே காணப்படும் , சிக்கலான சுற்றுகளில்(Complex Electronic circuits) ,  மைக்ரோசிப்புகளில் காணப்படும்! அந்த மைக்ரோசிப்பின் உள்ளே , ஆயிரம் , மில்லியன் , பில்லியன் கணக்கில்  டிரன்சிஸ்டர்கள் இருக்கும்!

transistor6

டிரான்சிஸ்டர்  என்பது மிக சின்ன அளவிலான ஒரு மின்னணு கூறு(Electronic Component)! இது இரண்டு வகையான வேலைகளை செய்ய கூடியது! அவை ச்விட்சாக(Switch) அல்லது பெருக்கியாக(Amplifier) வேலை செய்ய கூடியது!

டிரான்சிஸ்டர் பெருக்கியாக வேலை செய்யும் போது என்னென்ன நடக்கும் என்று முதலில் பார்க்கலாம் ..ஒரு மிக சிறிய அளவிலான மின்சாரத்தை  , டிரான்சிஸ்டரின் ஒரு முனையில் உள்ளே   கொடுத்தால் , மறுமுனையில் அதிக அளவிலான  மின்சாரத்தை வெளியிடும்! ஆக, இதை வேறு பெயர் சொல்லி அழைக்க விரும்பினால்  , மின்சார உயர்த்தி(Current Amplifier) என்று அழைக்கலாம்!

 

காது கேளாதவருக்கான , கேள்வி சாதனத்தில்(Hearing Aid) , இந்த டிரான்சிஸ்டர்  தான் உபயோகம் செய்யப்படுகிறது! எப்படி உபயோகம் ஆகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்! கேள்வி சாதனத்தில் , ஒரு மைக்ரோபோன் இருக்கும்! இவ்வுலகில் , நம்மை சுற்றி எழும் ஓசைகளை , இந்த மைக்ரோ போன் , உள்ளீடாக(Input) எடுத்து கொள்கிறது. அவ்வாறு உள்ளீடாக எடுத்து கொள்ளப்பட்ட  வித விதமான ஓசைகளுக்கு தக்க  ஏறி இறங்கும் மின்சாரமாக மாற்றப்படுகிறது. அந்த ஏறி இறங்கும் மின்சாரம் , ஒரு டிரான்சிஸ்டரின்  உள்ளே கொடுக்கப்படுகிறது! அந்த மின்சாரத்தை டிரான்சிஸ்டர்  உயர்த்தி , ஒரு ஒலி  பெருக்கியில்(Sound Amplifier) கொடுக்கிறது! ஆக , காது கேளாதவருக்கு , இந்த கேள்வி சாதனம் மூலமாக , தன்னை சுற்றி எழும் ஓசைகளின் ஒலி பெருக்கப்பட்டு காதில் கேட்கிறது !

transistor6

 

ஒரு டிரான்சிஸ்டரை  ச்விட்சாகவும் உபயோகிக்கலாம்! டிரான்சிஸ்டரின் ஒரு பகுதியில் ஒரு சிறிய அளவிலான மின்சாரத்தை கொடுத்தால், டிரான்சிஸ்டரின் இன்னொரு பகுதியில் அதிக அளவிலான மின்சாரத்தை வெளியிடும்! அதாவது , ஒரு சிறிய அளவிலான மின்சாரம், அதிக அளவு மின்சாரத்தை சுவிட்ச் ஆன் செய்கிறது! இதை கொண்டு தான் எல்லா கணினி சில்லு(Computer chips) களும் வேலை செய்கின்றன! கணினியின் நினைவக சில்லில்(Memory chip) , பில்லியன் எண்ணிக்கையில் டிரான்சிஸ்டர்கள்  இருக்கும்!இந்த டிரான்சிஸ்டர்கள்  ஒவ்வொன்றையும், தனி தனியாக ஆன் , ஆப் செய்து கொள்ளலாம் ! ஆக , ஒவ்வொரு டிரான்சிஸ்டரும் ஆன் , ஆப் என்று இரு வேறு நிலைகளில் இருந்து கொள்ளலாம். இதை கொண்டு தான் , கணினியின் நினைவக  சில்லுகளில் உள்ள ஒவ்வொரு டிரன்சிஸ்டரை ஆன் , ஆப் செய்வதன் மூலம் , 1 அல்லது  0 சேமிக்கப்படுகிறது.

transistor8     transistor7

 

பழைய இயந்திரங்களில் உள்ள சிறப்பு என்னவென்றால் , அவற்றை அக்கு வேறு , ஆணி வேறாக ஆராய்ந்து , அவை எப்படி வேலை செய்கிறது என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடலாம்! ஆனால் மின்னனுவியலை பொறுத்தவரை , அந்த கதை எல்லாம் நடக்காது! மின்னணுவைக் கொண்டு எப்படி எப்படி மின்சாரத்தை கட்டு படுத்தலாம் என்று உரைப்பதே மின்னணுவியல்! அணுவின் உள்ளே இருக்கும் ஒரு மிக சிறிய துகளே(Particle) மின்னணு(Electron)!அதனுடைய எடையை  கேட்டால் அசந்து விடுவீர்கள் .. 0.000000000000000000000000000001 kg மட்டுமே! உங்கள் விரல் நகத்தின் அளவுடைய ஒரு கணினி சில்லில் , 500 மில்லியன் டிரான்சிஸ்டரில் இருந்து 2 பில்லியன் தனி தனி டிரான்சிஸ்டர்கள் இருக்கும்! அப்புறம் எப்படி , தனி தனியாக ஆராய்ந்து பார்த்து அது எப்படி வேலை செய்கிறது என்பதை அறிய!டிரான்சிஸ்டர் பற்றிய கோட்பாடு  மற்றும் நம் கற்பனை திறன் , இவை இரண்டு மட்டுமே , இனி நமக்கு உதவ போகிறது! இந்த டிரான்சிஸ்டர்களை எதை கொண்டு உருவாகுகிறார்கள் என்று அடுத்து பார்க்கலாம்!

டிரான்சிஸ்டர்கள் , மண்ணில் கிடைக்கும் சிலிகான் என்ற வேதியியல் தனிமத்தை  கொண்டு உருவாக்கப்படுகிறது! இந்த சிலிகான், மின் அணுக்கள் சுலபமாக ஓட கூடிய கடத்தியும்(Conductor) அல்ல, மின் அணுக்களின் ஓட்டத்தை எதிர்க்கும்  மின் கடத்தாப்  பொருளும்(Insulator) அல்ல! இது  அரைகுறையாக மின் அணுக்களை கடத்த கூடிய ஒரு மின் கடத்தி! இந்த சிலிகானில்  வேறு சில வேதியியல் தனிமங்களை  சேர்த்து மாசு ஊட்டும் போது(Doping) , அதனுடைய நடத்தையை வேறு மாதிரி மாற்றி கொள்ள முடியும்!

 

சிலிகானில் , ஆர்சினிக் , பாஸ்பரஸ் அல்லது அண்டிமோனி போன்ற வேதியியல் தனிமங்களை சேர்த்து மாசு ஊட்டும் போது , சிலிகானின் உள்ளே , ஏற்கனவே இருக்கும்  மின் அணுக்களோடு சேர்த்து , கூடுதல் மின் அணுக்கள் உருவாகும்! இவ்வாறு உருவாகும் மின் அணுக்களால் , சிலிகான் சுலபமாக மின்சாரத்தை கடத்தும் கடத்தி போல செயல்படும்!  அதாவது , மின் அணுக்கள் ஆனது , இந்த சிலிகானில் இருந்து , அதன் அருகில் இருக்கும் பொருளுக்கு சுலபமாக கடத்தப்படும் !மின் அணுக்களுக்கு எதிர்மறை சார்ஜ்(negative) இருப்பதால் , இந்த முறையால் மாசு ஊட்டப்பட்ட சிலிக்கானை ‘n’வகை என்று அழைப்பர்!

மாறாக , சிலிகானில் , போரான் , காலியம் , அலுமினியம் போன்ற வேதியியல் தனிமங்களை கொண்டு மாசு ஊட்டும் போது , அதனுள்ளே இருக்கும் சில  மின் அணுக்கள் அகற்றப்படுகின்றன! மின் அணுக்கள் இருந்த இடங்கள் எல்லாம் காலியாக  இருக்கும்! அவற்றை ஓட்டைகள்(Holes)என்றழைப்பர்!  இதனால் , அருகில் உள்ள பொருட்களில் உள்ள மின் அணுக்கள் இதனுள் சுலபமாக கடத்தப்படும் ! ஓட்டைகளுக்கு  நேர்மறை சார்ஜ்(Positive) இருப்பதால் , இந்த முறையால் மாசு ஊட்டப்பட்ட சிலிக்கானை ‘p ‘ வகை என்று அழைப்பர்!

transistor11

 

transistor12

 

இரண்டு வகையான சிலிகான்களை பற்றி அறிந்து கொண்டோம்! ஒன்று ‘p ‘ வகை , மற்றொன்று ‘n ‘ வகை! இந்த இரண்டு வகை சிலிகான்களையும் , ஒரு சாண்ட்விச்சை போல் ஒன்று சேர்க்கும் பொழுது , நிறைய அற்புதமான விஷயங்கள் நடை பெறுகின்றன! அவற்றை பற்றி அடுத்து பார்க்கலாம்!

transistor13

 

ஒரு ‘p ‘ வகை சிலிகானையும் , ‘n ‘ வகை சிலிகானையும் , சான்ட்விச் போல இணைத்து , இரண்டுக்கும் இடையே ஒரு நேர்மறை மின் அழுத்தத்தை கொடுத்தவுடன், மின் அணுக்கள் அதிகமாக இருக்கும் , ‘n ‘ வகையில் இருந்து , மின் அணுக்கள் அகற்றப்பட்ட ‘p ‘ வகைக்கு மின்சாரம்  சுலபமாக பாயும்! ஆனால் , இரண்டுக்கும் இடையே ஒரு எதிர்மறை மின் அழுத்தம் கொடுத்தால் , எந்த மின்னோட்டமும் இருக்காது!ஆக, இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் , இவ்வகை மின்கூறுகளில் , மின்சாரம் ஒரு திசையில் மட்டுமே பாயும்! எதிர் திசையில் மின்சாரத்தை பாய வைப்பது சாத்தியமே இல்லை! இவ்வகை மின் கூறுகளை , இரு முனையம் என்று அழகு தமிழில் அழைப்பர்! ஆங்கிலத்தில் இதன் பெயர் டையோடு(Diode) !

transistor3

இந்த மின் கூறு , ஒரு திசையில் மட்டும் மின்சாரத்தை பாய அனுமதிப்பதால், இதை சீராக்கும் சுற்றாக(Rectifier) ,பயன் படுத்த படுகிறது! சீராக்கும் சுற்று என்றால் என்ன என்று விரிவாக அறிய இன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை பதிவை படிக்கவும்! இந்த சீராக்கும் சுற்று , மாறு திசை மின்னோட்டத்தை(Alternating current) , ஒரு திசை மின்னோட்டமாக(Direct current) மாற்றி கொடுக்கிறது! மேலும் , இந்த டையோடுகளின் வழியாக மின்சாரம் பாயும் போது , விளக்கு எரியும் வண்ணம் வடிவமைக்க படுவதுண்டு! இதை தான் LED(Light  Emitting  Diode ) என்று அழைப்பர்! அழகு தமிழில் சொல்வதென்றால், ஒளி உமிழும் இருமுனையம் என்று சொல்லலாம்!

transistor14       transistor15

 

ஒரு ‘n ‘ வகை , மற்றும் ஒரு ‘p ‘ வகையை , ஒரு சான்ட்விச் போல் இணைக்கும் பொழுது என்னவெல்லாம் விந்தைகள் புரிகின்றன என்று பார்த்தோம்! இப்பொழுது , இரண்டுக்கு பதிலாக ,மூன்று சிலிகான்களை , சான்ட்விச் போல் இணைக்க போகிறோம்! கீழே படத்தில் காண்பித்தது போல , ஒரு ‘n ‘ வகை , ஒரு ‘p ‘ வகை , மறுபடியும் ஒரு ‘n ‘ வகை! இரண்டு ‘n ‘ க்கு நடுவில் ஒரு ‘p ‘வகை சிலிகான் வைக்கப் பட்டிருக்கிறது! இது தாங்க npn டிரான்சிஸ்டர்! இதற்கு மூன்று கால்கள் உண்டு! அதாவது மூன்று மின்சார தொடர்பு கம்பிகள் உண்டு! அவை , உமிழ்ப்பான்(Emitter ), பேஸ் (Base ), சேகரிப்போன்(Collector )!

இரண்டு ‘n ‘ வகை சிலிகானோடும் இணைக்கப்படிருப்பது , உமிழ்ப்பானும்(Emitter) , சேகரிப்போனும்(Collecter)! ‘p ‘ வகையோடு இணைக்கப்பட்டிருப்பது பேஸ் !இரண்டு ‘n ‘ வகை சிலிகானிலும் , கூடுதல் மின் அணுக்கள் இருப்பதை தெரிவிக்கும் விதமாய் , ‘-‘ எதிர்மறை குறி(Negative charge) வரையப்பட்டுள்ளது! ‘p ‘ வகை சிலிகானில் , மின் அணுக்கள் , அகற்றப்பட்டிருப்பதை அறிவிக்கும் விதமாய் , ‘+’ நேர்மறை குறி(Positive charge) வரையப்பட்டுள்ளது!

transistor15

 

டிரான்சிஸ்டர் ஆப் ஆகி இருக்கும் நிலையில் , உமிழ்ப்பானுக்கும்(Emitter)  சேகரிப்போனுக்கு(Collecter) இடையே  மின்னோட்டம் எதுவும் இருக்காது! இடையில் இருக்கும் ‘p ‘ வகை சிலிகான்  ஒரு தடுப்பு சுவர் போல் செயல்படும்! இதை எப்படி ஆன் செய்வது என்று அடுத்து பார்க்கலாம்!

இந்த டிரான்சிஸ்டர்  எப்படி வேலை செய்கிறது என்பது தெளிவாக விளங்க , இந்த மூன்று சிலிகான் சாண்ட்விச்சை சற்றே இரண்டாய் பிரித்து பார்த்து படிக்கலாம்! ஒன்று ‘np ‘ இணைந்த பகுதி! மற்றொன்று ‘pn ‘ இணைந்த பகுதி! இந்த இரண்டு பகுதிகளும்  ஒரு இருமுனையத்தை ஒத்து இருக்கிறது அல்லவா ! ஏற்கனவே , நாம் மேலே பார்த்தோம் , எப்படி இருமுனையம் ஆன் ஆகும் என்று! ஒரு நேர்மறை மின் அழுத்தம் இருக்கும் வரை மட்டுமே , இந்த இருமுனையத்தின் வழியாக , மின்சாரம் பாயும்! இவ்வாறு மின்னோட்டத்தை , ஒரு இரு முனையம் ஆதரிப்பதை Forward Bias  என்று அழைப்பர்! ஆனால் எதிர்மறை மின் அழுத்தம் , இரு முனையத்துக்கு , கொடுக்க பட்டதே ஆனால் , இருமுனையம் , அதன் வழியே மின்சாரம் பாயாமல் தடுத்து விடும்!இவ்வாறு இரு முனையம் மின்சார ஓட்டத்தை தடை செய்வதை Reverse Bias  என்று அழைப்பர்!

transister19

transistor10

Forward Bias

transistor9

Reverse Bias

 

 

டிரான்சிஸ் டரின்  ‘np’ பகுதி Forward bias  செய்யபடுகிறது! அதாவது , பேஸ்ஸுக்கும்(Base) உமிழ்ப்பானுக்கும்(Emitter) இடையே படத்தில் காண்பித்தது போல் ஒரு நேர்மறை மின் அழுத்தம்(Positive Voltage) கொடுக்கப்படுகிறது! அவ்வாறு  ஒரு நேர்மறை மின் அழுத்தம் கொடுத்தவுடன் , உமிழ்ப்பான்(Emitter)  இணைக்கப்பட்டிருக்கும் ‘n ‘ வகை சிலிகானில் உள்ள மின் அணுக்கள் , பேஸ் இணைக்கப்பட்டிருக்கும் , ‘p ‘ வகை சிலிகானுக்கு இழுக்கப்படும்!

அடுத்ததாக, டிரான்சிஸ்டரின் ‘pn’ பகுதி Reverse Bias  செய்யபடுகிறது! அதாவது  பேஸ்ஸுக்கும்(Base) , சேகரிப்போனுக்கும்(Collecter) இடையே ஒரு எதிர்மறை மின் அழுத்தம்(Negative voltage) கொடுக்கப்படுகிறது! அதனால், ‘np ‘ பகுதியில் Forward Bias இன் போது , ‘n ‘ வகை சிலிகானில் இருந்து , ‘p ‘ வகை சிலிகானுக்கு இழுக்கப்பட்ட மின் அணுக்கள் , மெல்லிய  ‘p ‘ பகுதியில் உள்ள , கொஞ்ச ஓட்டைகளில்(Holes) , நிரம்பியது போக, மீதி மின் அணுக்கள் , ‘pn ‘ பகுதி Reverse  Bias  செய்து விட்ட படியால் , சேகரிப்போன்(Collecter) பக்கம் இழுத்து கொள்ளப்படும் ! இது தான் டிரான்சிஸ்டர் ஆன் ஆகிய நிலை!ஆக , ஒரு இருமுனையம் வாயிலாக , டிரான்சிஸ்டர்  எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தாயிற்று!

சரி , இப்பொழுது , இருமுனையத்தை சற்றே மறந்து விட்டு ஒரு முறை , npn டிரான்சிஸ்டர் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்த்து விடலாம்..

transistor16                      transistor17

 

 

பேஸ்ஸுக்கும் , எமிட்டாருக்கும் இடையே இருக்கும் மின் அழுத்தமும் , கலெக்டாருக்கும் , எமிட்டார்ருக்கும் இடையே இருக்கும் மின் அழுத்தமும் , பூஜ்யம் ஆக இருக்கும் வரை , டிரான்சிஸ்டர்  ஆப் நிலையில் இருக்கும்! இப்பொழுது , கலெக்டாருக்கும் , எமிட்டாருக்கும் இடையே ஒரு, மின்கலம் மூலமாக , ஒரு  நேர்மறை மின் அழுத்தம் கொடுத்து பாருங்கள்! ஒரு மின் அழுத்தம் இருந்த போதிலும் , எமிட்டாரில் இருந்து கலெட்டாருக்கு எந்த மின்னோட்டமும் இருக்காது! ஏன் என்றால் ,எமிட்டாரில் இருந்து கலெக்டாருக்கு, மின் அணுக்களை  ஓட விடாது தடுக்கும் தடுப்பு சுவர் போல் பேஸ் ஆனது இருக்கும்! இந்த டிரான்சிஸ்டரை  வேலை புரிய வைக்க , இன்னொரு  மின்கலம்  மூலமாக ,  ஒரு சிறிய அளவிலான , நேர்மறை மின் அழுத்தத்தை , பேஸ்ஸுக்கும் , எமிட்டாருக்கும் இடையே கொடுக்க வேண்டும்! அவ்வாறு ஒரு நேர்மறை மின் அழுத்தம் கொடுத்தவுடன் , அதாவது ஒரு 0.6V உக்கும் சற்றே  அதிகமாக கொடுத்தவுடன் , எமிட்டாரில் உள்ள மின் அணுக்கள் , ‘n ‘ வகை சிலிக்கானில் இருந்து , கிளம்பி , நடுவில் இருக்கும் மெல்லிய  ‘p ‘ வகை சிலிக்கானில் இருக்கும் ,குறைந்த அளவு  ஓட்டைகளை , நிரம்பியது போக , எஞ்சிய மின் அணுக்கள் , கலெக்டாரினால் சேகரிக்கப்படுகின்றன! கலெக்டார் , ‘n ‘ வகை சிலிக்கான் என்பதால் , அதில் , ஏற்கனவே , அதிக அளவு மின் அணுக்கள் இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது! ஆக , கலெக்டாரில் , ஏற்கனவே இருக்கும் மின் அணுக்கள் போக , இப்பொழுது , சேகரித்த மின் அணுக்களும் சேர்ந்து கொண்டு விட்டது ! கலெக்டாருக்கும், எமிட்டாருக்கும் இடையே ஒரு நேர்மறை மின் அழுத்தம் இருப்பதால் , கலெக்டாரிலிருந்து  எமிட்டாருக்கு அதிக அளவு மின்சாரம் பாயும்!

இப்போ , உங்களுக்கு புரிந்து இருக்கும் , ஏன் டிரான்சிஸ்டரை பெருக்கி(Amplifier) என்று அழைக்கிறார்கள் என்று ! மேலும் , பேஸ் ஸுக்கும் , எமிட்டாருக்கும் இடையே கொடுக்கப்படும் , 0.6V உக்கும் சற்றே அதிகமான மின் அழுத்தத்தை , பூஜ்யம் ஆக்கி விட்டால் , உடனே டிரான்சிஸ்டர் ஆப் ஆகி விடும் !

மேலும் , பேஸ்ஸுக்கும் , ஒரு சிறிய அளவு மின்சாரம் கொடுத்தால் மட்டுமே, டிரான்சிஸ்டர்  ஆன் ஆகும்! இல்லையேல் . , டிரான்சிஸ்டர்  ஆன் ஆவதற்கு வாய்ப்பே கிடையாது! ஆக , இது ஒரு சுவிட்ச் போலவும் செயல்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை!

அடுத்து pnp டிரான்சிஸ்டர்  எப்படி வேலை செய்கிறது என்றும் பார்த்து விடலாம்! pnp டிரான்சிஸ்டரும் , npn  டிரான்சிஸ்டர் போலவே தான் வேலை செய்யும்.. சில சின்ன மாறுதல்களோடு!

transistor

 

இந்த வகை டிரான்சிஸ்டரில் , மின்சாரம் , எமிட்டாரில் இருந்து கலெக்டாருக்கு பாயும்!இதிலே முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் , அவ்வாறு எமிட்டாரில் இருந்து கலெக்டாருக்கு , மின்சாரம் எப்பொழுது பாயும் என்றால் , பேஸில் ஒரு சிறிதளவு மின்சாரம் கூட பாயாத போது தான்! பேஸில் , சிறிதளவு மின்சாரம் பாய்ந்தால் கூட, pnp  டிரான்சிஸ்டர் , ஆப் ஆகிவிடும்!

 

PNP-transistor-biasing

ஒரு npn  டிரான்சிஸ்டரை  ஆன் செய்ய வேண்டும் என்றால் , பேஸ்ஸில் (Base ) ஒரு சிறிய அளவிலான மின்சாரத்தை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்! ஆனால் , ஒரு pnp  டிரான்சிஸ்டரில் , பேஸ்ஸுக்கு  எந்த விதமான மின்சாரமும் கொடுக்காமல் இருக்கும் வரை மட்டுமே , அது  ஆன் ஆகும்!

ஒரு npn டிரான்சிஸ்டரில் , கலெக்டாருக்கு , ஒரு நேர்மறை மின் அழுத்தம் கொடுக்கப்படுகிறது! ஆதலால் , மின்சாரம் , கலெக்டாரில்  இருந்து , எமிட்டாருக்கு பாய்கிறது!ஆனால், ஒரு pnp டிரான்சிஸ்டரில் , எமிட்டாருக்கு , நேர்மறை மின் அழுத்தம் கொடுக்கப்படுவதால் , மின்சாரம் , எமிட்டாரில் இருந்து காலெக்டாருக்கு  பாய்கிறது!

இனி அடுத்து வரும் மின்னணுவியல் பதிவுகளில் , இந்த டிரான்சிஸ்டர்களை கொண்டு எப்படி எப்படியெல்லாம் , மின்னணுவியலில் விந்தைகள் படைத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்!!!

 

 

 

Posted in மின்னணுவியல், மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்