காய் பழமாகும் போது என்னென்ன மாற்றங்கள் நிகழும்??
1.நிறம் மாறும்
2.அமைப்பு மாறும்
3.நறுமணசுவை மாறும்
4.சர்க்கரை உள்ளடக்கம் மாறும்
5.அமிலத்தன்மை மாறும்
இவ்வாறு நடக்கும் மாற்றங்களுக்கு பெரியதாய் துணை புரிவது ஹார்மோன் எதிலின்(Ethylene )
ஒரு காயானது பழுக்க தயாரானவுடன், அது அதிகம் சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின்னே, ஹார்மோன் எதிலினின் உற்பத்தி அதிகமாகிறது . அந்த ஹார்மோன் ஆனது ஒரு தொடர் வேதியியல் மாற்றங்களை தூண்டி விடுகிறது .
அவ்வாறு தூண்டப்பட்டவுடன் என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்…
1.பக்கவாட்டு வளர்ச்சி
2.செல் சுவர்கள் தளர்த்தப்படுவதால் , செல்களுக்கு இடையே இடைவெளி தோன்றும்
3.மாச்சத்தும்(Starch) , கரிம அமிலங்களும் சர்க்கரையாக(Glucose) மாறும்
4.நொதிகளின்(Enzymes) ஆற்றலால் மிருதுவாக்கப்படும்
5.பச்சையம்(Chlorophyll) குறைக்கப்பட்டு , வண்ண நிறமிகள்(Colouring Pigments) அளவு கூடும்
6.வெளியானவுடன் ஆவியாகும் வாசனை எண்ணெய்கள் உமிழப்படும்
இத்தகைய மாற்றங்களால் தான் பழங்கள் மிருதுவாக , வண்ண மையமாக , இனிப்பாக , வாசனையாக இருக்கின்றன . இவ்வாறு காயானது பழமாக பழுக்கும் போது தான் அதனுடைய விதைகள் சிதறி அடுத்து புதியதாய் செடிகள் முளைத்து தளைத்து ஓங்க ஏதுவாய் இருக்கும்.
தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப காய் பழுக்கும் நேரம் வேறுபடும். விரைவாகவும் பழுக்க கூடும் அல்லது மிக நிதானமாகவும் பழுக்க கூடும் . வாழைப்பழம் வெப்ப மண்டலத்தில் காய்க்கும் ஒரு பழம். அது மரத்தில் காய்த்து, போதிய வளர்ச்சி அடைந்தவுடன், அதற்கு ஏற்றாற்போல் தட்பவெப்ப நிலையையும் , ஈரப்பதமும் அமையப்பெறும் பொழுது அதி விரைவாக பழுக்கும் தன்மையுடையது.
வாழைத்தாரை மரத்தில் பழுக்கும் முன்னே அறுவடை செய்த பின்னரும் கூட அது தானாக பழுக்கும் தன்மையுடையது. நொதிகளின் துணையோடு அது தனக்குள் சேமித்து வைத்திருக்கும் மாச்சத்தை மேலும் மேலும் சர்க்கரையாக மாற்றி கொண்டே இருக்கும். ஒரு வாழையை காயாக அறுவடை செய்யும் போது அதனுள்ளே 20% மாச்சத்தும் , 1% சர்க்கரையும் இருக்கும். அதே வாழை பழமான பின்னே அதன் உள்ளே 1% மாச் சத்தும் , 20% சர்க்கரை என்று நிலைமை தலை கீழாக மாறி விடும்.
வாழைப்பழமானது தன்னை தானே பழுக்க வைக்க மற்ற பழத்தை காட்டிலும் அதிக அளவு எதிலின் வாயுவை வெளிப்படுத்த கூடியது. அவ்வாறு அதிகப்படியாக வெளிப்படும் எதிலின் வாயுவானது வேறு ஏதேனும் கனியாத பழம் வாழைப்பழத்தோடு சேர்ந்து வைத்தாலும் அவற்றையும் சேர்த்து பழுக்க வைக்க வல்லது!
பறித்த பழங்களை பழுக்க வைக்க விவசாயிகள் என்னென்ன தொழில்நுட்பங்கள் பயன் படுத்துகிறார்கள் என்று சற்று விரிவாக பார்க்கலாம்…
1.ரொம்பவே எளிதான ஒரு தொழில்நுட்பம் உண்டு , வீடுகளில் கூட இதனை செயல்படுத்துவார்கள்… அது என்னவெனில், ஏற்கனவே பழுத்த பழத்தையும் , பழுக்காத பழங்களையும் ஒன்றாக காற்று புகாத அரிசி டப்பாக்களின் உள்ளே போட்டு வைப்பது. அவ்வாறு போட்டு வைக்கும் போது , பழுத்த பழங்களில் இருந்து வெளிப்படும் எதிலின் வாயுவானது பழுக்காத பழங்களையும் சேர்த்தே பழுக்க வைத்து விடும்.
2. பழங்களை பழுக்க வைக்க அவற்றை காற்று புகாத அறைகளில் நிரப்பி புகை போடுவார்கள்.. இந்த புகை அசெட்டிலன் வாயுவை(Acetylene gas )பரப்புகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஏனைய விவசாயிகளும் பின்பற்றுவர். இதனால் ஒன்று போல ஒரே நேரத்தில் எல்லா பழமும் பழுத்து விடும் என்பதற்காக.. ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் பின்னடைவு என்னவென்றால் , பழுத்த பழங்களுக்கு ஒன்று போல நிறமோ , சுவையோ இருப்பதில்லை!
3. பழுக்காத பழங்களை வரிசையாக வைத்து அதன் மேலே வைக்கோலை போட்டு வைப்பது இன்னொரு முறை!இந்த முறையில் பழமானது பழுக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும்.
4.இருப்பதில் மிக மோசமாக பழுக்க வைக்கும் முறை , கால்சியம் கார்பைட் கொண்டு பழுக்க வைப்பது. கால்சியம் கார்பைடை தண்ணீரில் போட்டவுடன் அது அசெட்டிலன் வாயுவை வெளிப்படுத்தும். இந்த வாயு பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க வல்லது. இந்த கால்சியம் கார்பைடில், ஆர்சினிக் மற்றும் பாஸ்பரஸ் சிறிதளவு உண்டு. இந்த அசெட்டிலன் வாயு, நம் மூளைக்கு பிராண வாயு செல்வதை தடுத்து , நம் நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியது..இந்த ஆர்சினிக்கும், பாஸ்பரஸும் நச்சு பொருட்கள்..நம் உடல் நலத்துக்கு ஆபத்து விளைவிப்பவை!
கார்பைட் வைத்து பழுக்க வைத்த பழம்
இயற்கையாக பழுத்த பழம்
பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க எதிலின் வாயுவை பயன்படுத்துவர்.. இயற்கையாக காய்கள் பழமாக பழுக்க ஆரம்பித்தவுடன் வெளிப்படுத்துகின்ற எதிலின் வாயு ஒரு புறம் இருக்க , இவ்வாறு செயற்கையாக எதிலின் வாயு கொடுக்கப்படும் பொழுது காய்கள் உடனே பழுப்பதற்கு தூண்டப்படுகின்றன! எந்த பழத்தை பழுக்க வைக்க வேண்டுமோ அவற்றை ஒரு காற்று புகாத அறையில் வைத்து , எதிலின் வாயுவை செலுத்துவர். அந்த பழம் பழுப்பதற்கு வேண்டிய தட்ப வெப்ப நிலையும் உருவாக்கி தரப்படுகின்றன.
ஆக , உலகமெங்கிலும் பழங்களை பாதுகாப்பான முறையில் பழுக்க வைக்க அனைவரும் சிபாரிசு செய்வது எதிலின் உபயோகம் தான்!
அவசர உலகம்…! “மேலே” போவதும்…!
LikeLiked by 1 person
ஆமாம் தனபாலன் சார், சரியாக சொன்னீர்கள் , எல்லோருக்கும் அவசரம் தான்!
LikeLike
செம அக்கா, விதம் விதமான டோபிக்க்ஸ்ல எழுதி கலக்குறீங்க! அறியாத விடயம், தந்ததற்கு நன்றி, மேலும் சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொல்லும் தந்தது அருமை!
LikeLiked by 1 person
எனக்கு இது நெடு நாளைய கனவு சரவணா.. நம்மை சுற்றி என்ன நடக்குது என்று ஒரு பார்வை, அவ்வளவே! ஆச்சரியமாகத்தான் இருக்கிறது ஒவ்வொன்றையும் உற்று நோக்கும் போது! எது நல்லது எது கெட்டது என்று அறிய ஒவ்வொரு மனிதரும் முயல வேண்டும். இதை படித்து இரண்டொருவர் விழிப்புணர்வு அடைந்தால் அதை விட பேரின்பம் வேறொன்றுமில்லை 🙂
LikeLiked by 1 person
இல்லத்தரசியின் அறிவியல் பார்வை படிப்பவர்களை மிகவும் கவர்ந்துவிடுகிறது. உங்கள் விளக்கத்தில் இருக்கும் எளிமை அறிவியலை சுவாரஸ்யம் ஆக்குகிறது. அருமை, எளிமை, இனிமை எல்லாம் சேர்ந்திருக்கிறது உங்கள் எழுத்துக்களில். தொடரட்டும் உங்கள் பணி. நானும் தொடர்ந்து படிக்கிறேன்.
பாராட்டுக்கள்
LikeLiked by 1 person
வாங்க ரஞ்சனி அம்மா! எத்தனை பின்னூட்டம் வந்தாலும், நீங்க வந்து பின்னூட்டம் இடும் போது தான் , சிறு பிள்ளை போல் உள்ளம் துள்ளி குதிக்குது! நன்றி அம்மா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙂
LikeLike
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
LikeLike
மிக்க நன்றி ஆறுமுகம் சார் ! உங்களுக்கும் உங்கள் இனிய குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙂
LikeLike